வாழை.வ.பூ.மணிமொழி, வாழைக்குறிச்சி. குழிப்பிறை , திருமயம் ஒன்றியம். எழுத்தாளர், கவிஞர். நானிலம் எனும் மாத இதழின் ஆசிரியர். பழனி மடத்தை மீட்ட பழந்தமிழ் நான்கு நாட்டார்கள் எனும் வரலாற்று நூல் எழுதியிருக்கிறார்.
உழவர்களின் உற்ற தோழர் கே.எஸ்.அழகர்சாமி எனும் இந்நூல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டக் காலத்தைப் பேசுவதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான காவிரி உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றும்படி போராடி சிறைக்குச் சென்றவர் கே.எஸ்.அழகர்சாமி.
கலைஞர் கருணாநிதி எழுதிய நச்சுக்கோப்பை எனும் நாடகத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறந்தை நாராயணன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அன்னவாசல் பகுதியில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வெற்றிலைக் கொடிக்கால் விவசாய்கள் சங்கத்தை நிறுவி போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர் அழகர்சாமி.
1963 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின்படி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 230 கிராமங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. 300 கிராமங்களுக்கு மேல் விடுபட்டு போயிருந்தன. இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றி பெற்று மேலும் 114 கிராமங்கள் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின்படி எடுத்துக் கொள்ளப்பட்டது, என்கிற குறிப்பு இந்நூலில் உண்டு.
காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்றன. 1981 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றி தீர்மானத்தின்படி தோழர் கே எஸ் அழகர்சாமி தலைமையில் ஆண்களும் பெண்களும் மண்வெட்டி கூடைகளுடன் சென்று காவேரியில் இருந்து கால்வாய் அமைக்கும் போராட்டம் நடைபெற்றது. காவேரி ஆறு கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நுழையும் ஒகேனக்கல் அமைந்த தர்மபுரி மாவட்ட பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நஞ்சப்பன் புதுக்கோட்டை வருகை தந்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கருப்பையா போராட்டக்காரர்களை வரவேற்று கால்வாய் அமைக்க வழி கூறினார். அன்று போராட்டத்தில் கலந்திருந்த அனைவரையும் காவல்துறை கைது செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 'காவிரி உபரி நீர் கேட்டு போராடிய கம்யூனிஸ்டுகள் கைக்குழந்தையிடம் கைது' என்றும் மறுநாள் நாளிதழ்களில் பரபரப்பிடம் செய்திகள் வெளியாகின.
இந்நூலுக்குப் பதிப்புரை எழுதியிருக்கும் எஸ்.சி.சோமையா ஒரு செய்தியைத் தருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அண்ணவாசல் ஒன்றியத்தில் சொக்கநாதன்பட்டியில் பி.பெரியையா, ஏ.தர்மராஜ், எஸ்.மருதைச்சொக்கநாதன், எஸ்.சின்னத்தம்பி நால்வரும் சிங்கப்பூர் செல்கிறார்கள். பெரியய்யா, தர்மராஜ், இருவரும் தமிழுடன் இந்தி, ஆங்கில மொழிகள் நன்கு அறிந்தவர்கள். அங்கு சென்றவுடன் மலாய், சீனம்,பர்மிய, ஜப்பானிய மொழிகளையும் கற்றுத் தேர்ச்சியுற்றனர். அப்போது இந்திய தேசியப் படையை தொடங்கி நிதி திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் வந்து கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்து கூறும் பணியைத் தர்மராஜ் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பு திறனைப் பாராட்டிய நேதாஜி கைகுலுக்கி பாராட்டியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் மக்கள் அவருக்கு புல்லட் பைக் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி பெருமைப்படுத்தியுள்ளனர்.
இந்திய விடுதலை ஆதரவாளர்களான தர்மராஜ், பெரியய்யா, மருதைச் சொக்கநாதன், சின்னத்தம்பி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டு தாய்நாடு திரும்பியிருக்கிறார்கள்., என பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது இந்நூல்.
அண்டனூர் சுரா

கருத்துகள்
கருத்துரையிடுக