ராஜகவி வையாபுரி, காசவளநாடு சாமிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். ஆலங்குடியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் இவர் ஜவுளிக்கடை நடத்துகிறார். கவிஞர், பாடகர். இவரது கவிதைகளைப் பாராட்டும் கவிஞர்கள் கிராமத்துக்கீதமாய், உண்மையாய் இருப்பதால் ராஜமுத்திரை பதித்த கவிதை என்று கூறி ராஜகவி என்று அழைத்தார்கள். அதையே தன் பெயருக்கும் முன் இணைத்துக்கொண்டார்.
வசந்த காலம் இவரது முதல் தொகுப்பு. காவியத்தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தமிழரசி ஆசிரியர் முனைவர் ம.நடராசன் அணிந்துரையும் திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்பில் ஒரு கவிதை.தலைப்பு விவசாயி
ஏறு கட்டி உழுது விட்டேன்
ஏரியில தண்ணி இல்லை
மாடு ரெண்டை வித்துவிட்டேன்-நான் மனசு ஒடிஞ்சு போகவில்லை!
மருங்குளத்தில நடவு நட்டு
மானத்தையே பார்த்திருந்தேன்
மானம் பார்த்து மழை பொழிய - அம்மா மாரியம்மனை வேண்டி நின்றேன்!
குருங்குளத்தில தென்னையை நட்டு கொல்லையிலே குடியிருந்தேன்
குருத்துப்பூச்சி அடிக்கக்கண்டு- மனம் குமறி நானும் மலைக்கவில்லை!
காட்டு மேட்டை சீர்படுத்தி
கடின உழைப்பை நம்பியிருந்தேன் நாட்டுக்காக உணவுதர- நான் நாளெல்லாம் உழைத்திருப்பேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக