பா. அகத்திய நாடன், கவிஞர்.இயற்பெயர் பா. பிச்சைமுத்து. கவிஞர். குடுமியான்மலை அருகில் வயலோகம். கிராம அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்று காலமானவர். தீவிர இடதுசாரி. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சியின் முழுநேர ஊழியர். கல்லூரி காலத்தில் இந்திய மாணவர் சங்கத்திலும் பின் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்திலும் பொறுப்புகள் வகித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். 1977- 80களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்தபோது இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். தொழிலாளி வர்க்கம் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து 1982 ஜனவரி 19 இல் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டவர். பின் அரசு பணியில் சேர்ந்த போதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டாக நடத்திய வீரம் செறிந்த வேலை நிறுத்தம் மறியல் போரில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அரசின் அடக்குமுறைக்கும் டெஸ்மா சட்டத்தின்படி பணிநீக்கம் செய்யப்பட்ட கொடுமைக்கும் ஆளானவர். மார்க்சிய சிந்தனையோடு கூடிய இலக்கிய ஆர்வத்தோடு இவர் படைத்த அடையாளங்கள் என்னும் முதல் கவிதை தொகுப்பின் அறிமுக உரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடும்போது "பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அனுபவத்தினையும் வாலிபர்களுக்கே உரிய தீவிர உணர்வினையும் இவரது கவிதைகளில் காணமுடிகிறது"என்றார். இவரது மகன்களுக்கு லெனின், ஸ்டாலின் எனப் பெயர்சூட்டியவர்.
நீதியின் பலம் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. பெரிய கடப்பாரையைக் கொண்டு பெரும் பாறாங்கல்லைப் புரட்டும் அளவில் முடியாவிட்டாலும் சிறிய துரும்பைக் கொண்டு பல்லின் இடுக்குகளில் கறை அழுக்குகளையாவது குத்தி நீக்கலாம் என்ற சிறு முயற்சியே இந்நூல் என்கிறார்.
இந்நூலில் ஒரு கவிதை
காற்று திசை மாறும்
சனநாயக அரசியலின் கோரமுகங்கள்
கிழிபட்டு ஆடுகின்றன 'கட் அவுட்' களில்
ஆடிக்காற்று.

கருத்துகள்
கருத்துரையிடுக