கசி. விடுதலைக்குமரன், நரிமேடு, புதுக்கோட்டை. கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர். மக்கள் விடுதலைக்கான களத்தில் , தனது முழு நேர வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த களச் செயற்பாட்டாளர். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை தமது சி.பி.ஐ ( எம் -எல் ) மக்கள் விடுதலை அங்கீகரிக்கிறது, என்று சொல்லும் இவர் கல்லூரி பருவத்தில் போராட்டக்கள அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
1983இல் வெளிக்கடை சிறைச்சாலை படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இனவுணர்வு வெடித்து சிதறியது. அந்தப் போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டு கருப்பு சட்டையோடு கல்லூரிக்குள் நுழைந்தவர் சிவப்பு சிந்தனையோடு வெளியேறினார். இவருடைய அரசியல் குரு ஜெ. சிதம்பரநாதன். புதுக்கோட்டையின் சிற்பி, என தோழர் க.மு. வல்லத்தரசு எனத் தொடர்ந்து பரப்புரையாற்றி வருகிறவர்.
சாதி ஒழிப்பு - மாற்றத்திற்கான முதன்மைப் பணி எனும் இந்நூல் மக்கள் விடுதலை பதிப்பகம் வெளிவந்துள்ளது. அணிந்துரை பாட்டாளி. மதிப்புரை மு. வேதரெத்தினம் ( ஆன்மீகப் பொgதுவுடைமை நெறியாளர் ).
சாதியின் தோற்றம், சாதிக்கும் அரசுக்கும் என்ன உறவு , ஆங்கிலேயரும் சாதியும் , சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் , சாதிய சமூகமும் - முதலாளித்துவமும், உடனடி இயக்கத்திற்கான கோரிக்கைகள் , சாதியைத் தகர்த்தெறிவது எப்படி? ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஆழமாக பேசுகிறது.
அகமணம், புறமணம் என்பதற்கு புதுவரையறை இந்நூல் தருகிறது. மேற்கத்திய நாடுகளில் இனக்குழுக்கள் அழிவிலேதான் தேசிய இனம், நாடு, அரசு போன்றவை உருவாகி இருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் இனக்குழுக்கள் சாதியாக, நாடாக உருமாற்றம் கொண்டுள்ளன. விவசாய உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் மத்தியில் இருந்தே இன்று நாம் காணும் பெரிய சாதிகள் அனைத்தும் தோன்றி உள்ளன. சாதிகள் ஒருங்கிணைந்து வாழ்ந்த போது நில உரிமையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. அதுவே சாதியில் உயர்வு தாழ்வுகளை உருவாக்கியது. மேலை நாடுகளில் இனக்குழுக்களின் அழிவிலே அரசுகள் தோன்றியுள்ளன. ஆனால் நம் மண்ணில் இனக்குழுக்களின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சாதிகளை ஒழிக்காமலேயே அரசுகள் தோன்றியுள்ளன. மநு கொள்கைக்கு எதிராக தோன்றியது வலங்கை, இடங்கை சாதிகள் பிரிவு. ஆனால் பிராமணம் இந்த இரு பிரிவுகளுக்கும் மேலானது எனக் காட்டிக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தியது. ஆங்கிலேயர்கள் இந்த வலங்கை இடங்கை 98 , 98 சாதிகளுக்குள் சண்டையை மூட்டும் பொருட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டது, என மார்க்ஸ்- ஏங்கல்ஸ் பார்வையில் சாதியின் தோற்றம்- வளர்ச்சி - போக்கு குறித்து இந்நூல் பேசுகிறது.
சாதியை ஒழிக்க ஒரு வழியைச் சொல்லும் இந்நூல் சாதி ஒழிப்புக்கு முன்னால் அரசு செய்தாக வேண்டிய சில வழிமுறைகளையும் சொல்கிறது.
சாதி ஒழிப்புக்கான முதன்மையான பணி இந்நூலை வாசிப்பதிலிருந்து தொடங்கலாம்....


கருத்துகள்
கருத்துரையிடுக