சு. நரேந்திரன், மருத்துவர். பூர்வீகம் புதுக்கோட்டை. தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்து, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “கல்லீரல் அமீபா சீழ்க்கட்டியினால் நேரும் இறப்பு விழுக்காடு கட்டுப்பாடு” என்னும் தலைப்பிலும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது தந்தை தினத்தந்தி இதழின் மாவட்ட நிருபர்.
30 ஆண்டுகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியவர். பேராசிரியராகப் பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கியவர். தற்போது தஞ்சாவூர் கீழவீதியில் அரண்மனைக்கு எதிரில் ஒரு சிறிய மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிறார்.
19.10.2022 நாளிட்ட ஆனந்த விகடன், மாரத்தான் மனிதர்கள் வரிசையில் வெ.நீலகண்டன் இவரைப் பதிவு செய்துள்ளார். தமிழில் மருத்துவம் படித்த டாக்டர்கள் வர வேண்டும்! என்பது இவரது ஆகப்பெருங்கனவு. அதற்காகத் தன் வாழ்வின் 50 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறார். இதுவரை 20000 சொற்களுக்கும் மேல் மருத்துவக் கலைச் சொற்களைச் சேகரித்துள்ளார். செரிமானப் பாதை அறுவை மருத்துவம் ; பொது அறுவை மருத்துவம் என இரண்டு நூல்கள் மருத்துவ மாணவர்களுக்குப் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 30 மருத்துவ நூல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும்; தமிழால் மருத்துவக் கல்வி முடியும் என்கிற இரு நூல்களும் நம்பிக்கையூட்டும் நூல்கள்.
நரேந்திரன் தன் எழுத்துப் பங்களிப்புக்காகவும் மருத்துவ ஆய்வுக்காகவும் ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். இந்திய அரசின் தேசிய விருது, இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆப் சயின்ஸ் அமைப்பின் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது,...உட்பட பல விருதுகள் பெற்றவர்.
"தமிழால் மருத்துவக் கல்வி முடியும்", எனும் இந்நூல் தமிழ் வழி மருத்துவக் கல்வி முடியும், முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார்.
புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி -2022, நூல் போட்டியில் "அறிவியல் தமிழ் நேற்றும் இன்றும்" -இணையத் தளக் கட்டுரை பிரிவில் பரிசு பெற்றது.



கருத்துகள்
கருத்துரையிடுக