புதுக்கோட்டை எழுத்தாளர் -125
ஆலங்குடி வெள்ளைச்சாமி , ஆலங்குடி அருகிலுள்ள கீழாத்தூரில் பிறந்தவர். ஓர் இசைப்பாடகனாக கலைப் பயணத்தைத் தொடங்கி பேச்சாளர் , கவிஞர், பாடலாசிரியர், பட்டிமன்ற- பாட்டுமன்ற நடுவர் வரைக்குமாகத் தன் திறமை உருமாற்றத்தால் வடிவமைத்துக்கொண்டவர். இவர் முறையாக கற்றுக்கொண்ட இசைக்கலை இவரது தொடர் வளர்ச்சிக்கு உந்துவிசையாக இருந்துவருகிறது. தமுஎகச பொறுப்பாளர். வீதி நாடகங்கள் மற்றும் தனி இசைப்பாடல்களில் தனி முத்திரை பதித்து வருகிறார். யூடியூப் சேனல் மூலமாக அரசியல், கலை, இலக்கியம், விமர்சனம்,.. எனப் பல்துறைகளில் பயனுள்ள கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார்.
கவிதை எழுதும் தருணம் இவருக்கு மழையில் நனையும் கணமாக இருக்கிறது. அப்பத்தாவின் கருக்கருவா, இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ஆனந்த விகடன், செம்மலர், இணைய இதழ்கள்,...என பல இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இது. அவர் வாழ்ந்த கிராமத்தின் வாழ்க்கை, தடம், உறவுகள், ஊர் ,மண்,மனிதர்கள், எனத் தொன்மைக் காலத்திலிருந்து இன்று மறைந்தும் மறந்தும்போன பொருட்கள், சொல்லாடல்களைக் கொண்ட தொகுப்பாகவும் இந்நூலை அணுக முடிகிறது. எளிய சொல், எளிய பதம் மனதிற்கு நெருக்கமான அனுபவங்களைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பு அப்பத்தா கையில் வைத்திருக்கும் கருக்கருவாளால் மனதைக் கோதிவிடுகிறார். இத்தொகுப்பில் ஒரு கவிதை.
தாத்தாவின் கும்பா
எங்களின்
எவர்சில்வர் தட்டோடு
ஒப்பிட முடியாத உயரத்தில்
ஒற்றைக் காலில்
தாத்தாவை நோக்கி தவம் செய்யும் அவரின் வெண்கல கும்பா
குளித்து பட்டையடித்து
தாத்தா சம்மனமிட்டு
அமர்ந்ததும்
வெங்கலக் கும்பாவில்
சோறு போட்டுச் சரட்டிவிடுவாள்
அப்பத்தா
தாத்தா மயானத்துக்குப்
போனதும்
பரணில் முடங்கியது கும்பா
தாத்தா நினைவு நாளில்
அப்பா திதி கொடுக்கும்போது
இறங்கி வந்து மீண்டும் பரணேறும் அது
பஞ்சம் ஆட்கொண்ட
ஓர் ஆண்டில்
கும்பாவை விற்று
கொஞ்சம்
பசியைப் போக்கிக்கொண்டோம்
இபோதெல்லாம்
கும்பாவுக்கும் சேர்த்தே
திதி கொடுக்கிறார்
அப்பா

கருத்துகள்
கருத்துரையிடுக