முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுரேஷ் மான்யா

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 127


சுரேஷ் மான்யா, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களின் மீதான ஈடுபாட்டின் காரணமாய் 2013-இல் புதுக்கோட்டைக்கு குடிபெயர்ந்தவர். தற்போது பொதுநூலகத் துறையின் இளநிலை உதவியாளராக புதுக்கோட்டை மாவட்ட மையநூலகத்தில் பணிபுரிகிறார். பிறப்பு: திருச்சி- லால்குடி.

கவிஞர், சிறுகதையாளர், நூல் விமர்சகர், பத்திரிகையாளர். புதுக்கோட்டையை முகவரியாக் கொண்டு வெளிவந்த உயிர்மொழி இலக்கிய இதழின் ஆசிரியர். இரண்டு இதழ்களோடு நின்றுவிட்ட இவ்விதழ் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்தன்னவாசல் இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர். இவரது முதல் சிறுகதை உயிர்எழுத்து இதழில் வெளிவந்தது.

கல்நாகம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.  2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இந்நூல் பரவலான கவனத்தை ஈர்த்ததுடன் சௌமா இலக்கிய விருதும் பெற்றது.

ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.  கல்நாகம் என்கிற சிறுகதை பனிவீடு என்கிற பெயரில் குறும்படமானது.  மல்லிகா, பவானி இரு பெண்கள் பனிவீடு என்கிற சொகுசு ஓட்டலில் பணி செய்கிறார்கள். மல்லிகா  கணவரைப் பிரிந்தவர். இந்த விடுதியில் 'அவன்' என்கிற கதாபாத்திரம் வேலைக்குச் சேர்கிறான்.

மல்லிகா அக்காவை ஒருவன் போதைக்கிறக்கத்தில் சீண்டிவிட 'அவன்' என்கிற பாத்திரம் தட்டிக் கேட்கிறான். பிறகு அவன் - மல்லிகா இருவருக்குமிடையே  நிகழும் நெருக்கமும்  விலகலும்  புதர் கோவிலுக்குள்  கல் நாகங்கள் இரண்டு இறுகப் பின்னிப் பிணைந்து விலகி உதிர்வதுமான உருவகத்தைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார்.

இக்கதையில் வரும் அவனை சுரேஷ்மான்யாவாக உருவகப்படுத்திக்கொள்ள வாசகனுக்கு இடம் தருகிறார். அதைவிடவும் அவனைத் தன்னையாக உருவகப்படுத்தி வாசிக்கையில் மல்லிகா அக்காவை இன்னும் நெருங்கமுடிகிறது.

இப்படியாக எல்லா கதைகளிலும் எதையேனும் ஒரு பாத்திரத்தை இவராக அல்லது இவருடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள தோன்றுகிறது. இவரது கதைகளில் எதாவது ஒன்றின் மரணம் அல்லது பிரிதல் அல்லது காணாமல் போதல் இயல்பாக நடந்தேறுகிறது.

தனித்து அலையும் பறவையாய்  பறவையின் மொழியில் தன் கதைகளைச் சொல்லிவிட்டு சலனமின்றி பறந்துவிடும் சுரேஷ்மான்யாவிற்குள் இன்னும் பலநூறு கதைகள் உள்ளன. அவற்றை அவர் எழுதித் தீர்க்க வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல,,,



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...