புதுக்கோட்டை எழுத்தாளர் - 127
சுரேஷ் மான்யா, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களின் மீதான ஈடுபாட்டின் காரணமாய் 2013-இல் புதுக்கோட்டைக்கு குடிபெயர்ந்தவர். தற்போது பொதுநூலகத் துறையின் இளநிலை உதவியாளராக புதுக்கோட்டை மாவட்ட மையநூலகத்தில் பணிபுரிகிறார். பிறப்பு: திருச்சி- லால்குடி.
கவிஞர், சிறுகதையாளர், நூல் விமர்சகர், பத்திரிகையாளர். புதுக்கோட்டையை முகவரியாக் கொண்டு வெளிவந்த உயிர்மொழி இலக்கிய இதழின் ஆசிரியர். இரண்டு இதழ்களோடு நின்றுவிட்ட இவ்விதழ் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்தன்னவாசல் இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர். இவரது முதல் சிறுகதை உயிர்எழுத்து இதழில் வெளிவந்தது.
கல்நாகம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இந்நூல் பரவலான கவனத்தை ஈர்த்ததுடன் சௌமா இலக்கிய விருதும் பெற்றது.
ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கல்நாகம் என்கிற சிறுகதை பனிவீடு என்கிற பெயரில் குறும்படமானது. மல்லிகா, பவானி இரு பெண்கள் பனிவீடு என்கிற சொகுசு ஓட்டலில் பணி செய்கிறார்கள். மல்லிகா கணவரைப் பிரிந்தவர். இந்த விடுதியில் 'அவன்' என்கிற கதாபாத்திரம் வேலைக்குச் சேர்கிறான்.
மல்லிகா அக்காவை ஒருவன் போதைக்கிறக்கத்தில் சீண்டிவிட 'அவன்' என்கிற பாத்திரம் தட்டிக் கேட்கிறான். பிறகு அவன் - மல்லிகா இருவருக்குமிடையே நிகழும் நெருக்கமும் விலகலும் புதர் கோவிலுக்குள் கல் நாகங்கள் இரண்டு இறுகப் பின்னிப் பிணைந்து விலகி உதிர்வதுமான உருவகத்தைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார்.
இக்கதையில் வரும் அவனை சுரேஷ்மான்யாவாக உருவகப்படுத்திக்கொள்ள வாசகனுக்கு இடம் தருகிறார். அதைவிடவும் அவனைத் தன்னையாக உருவகப்படுத்தி வாசிக்கையில் மல்லிகா அக்காவை இன்னும் நெருங்கமுடிகிறது.
இப்படியாக எல்லா கதைகளிலும் எதையேனும் ஒரு பாத்திரத்தை இவராக அல்லது இவருடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள தோன்றுகிறது. இவரது கதைகளில் எதாவது ஒன்றின் மரணம் அல்லது பிரிதல் அல்லது காணாமல் போதல் இயல்பாக நடந்தேறுகிறது.
தனித்து அலையும் பறவையாய் பறவையின் மொழியில் தன் கதைகளைச் சொல்லிவிட்டு சலனமின்றி பறந்துவிடும் சுரேஷ்மான்யாவிற்குள் இன்னும் பலநூறு கதைகள் உள்ளன. அவற்றை அவர் எழுதித் தீர்க்க வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல,,,

கருத்துகள்
கருத்துரையிடுக