புதுக்கோட்டை எழுத்தாளர் - 131
க.வெ.நடேசக் கோனார். நாட்டுப்புறப் பாடகன். அமிர்தகவி என அழைக்கப்படுகிறார். திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளான்விடுதி இவரது சொந்த ஊர். புயல், பூகம்பம், கொலை போன்ற துயரங்களை அனுதாபக் கீதங்களாகப் பாடி மக்கள் உள்ளத்தைச் சாந்தப்படுத்தியிருக்கிறார். பாடுவதையே தொழிலாகக் கொண்டு வறுமை நிலையோடு வாழ்ந்து மறைந்துள்ளார். வடகாடு வயி.மு.மு.நடராசன் செட்டியார், சி.வீர.சின்னையா சேர்வை, புள்ளம்பாடி புலவர் பெருமான், பு.கா.காதர் இபுராஹிம், அ.க.அரங்குளவன் செட்டியார் போன்ற புரவலர்கள் இவரை ஆதரித்துள்ளார்கள், என்கிறார் நடேசக் கோனாரின் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கும் புலவர் சி.துரைமாணிக்கம் அவர்கள்.
மேலும் நடேசக் கோனார் பாடிய மகாகாந்தியம், குஞ்சம்மாள் கொலைச்சிந்து, குடும்ப வினோதப்பாட்டு, தோணிப்பாட்டு, இரண்டாவது புயல் சிந்து, விடுதலைப் பாட்டு, ஆடிப்பூரக்கும்மி, சொரிசிறங்குப் பாட்டு, பாலசுப்பிரமணியம் பதிகம் போன்ற பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை.
மக்கள் பாடலைக் கொண்டே மக்களுக்குச் சீர்த்திருத்தக் கருத்துகளை வழங்கியவர் இவர். விஜயகானம், அறுகொலைச் சிந்து போன்ற கதைவடிவம் கொண்ட பாடல்கள் இவருடையது. இவரது மற்றொரு நூல் விஜயானந்தக் களிப்பு.
ஆற்றுப்பாசனம் கொண்ட தஞ்சாவூர், பாசனமற்ற புதுக்கோட்டை இவ்விரு மாவட்ட ஊர்கள் அருகருகே இருந்தும் பெண் எடுத்தல் கொடுத்தல் இல்லாத போக்கை ஏற்றப்பாட்டின் வடிவத்தில் பாடியுள்ளார். இவர் காந்தியவாதி என்பதால் பல பாடல்களில் காந்திய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் பெருமளவில் நடக்கும் மொய்விருந்து விழாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இவரது பாடல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தவர் புலவர் துரைமாணிக்கம். இவர் எம்.பில் ஆய்வுக்காக புதுக்கோட்டை நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கையில் நடேசக் கோனாரும் அவரது நாட்டுப்புறப் பாடல்களும் மக்களால் பாடப்பட்டு வருவதை உள்வாங்கினார். பிறகு அவரது பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார். இதற்காகப் புலவர் சி.துரைமாணிக்கம் அவர்களுக்கு எமது நன்றிகள்.
விஜயகானம் எனும் நூல் வீரவாளால் வெற்றிகொண்ட விசயரெகுநாத வணங்காமுடி வழுவாட்டித் தேவர் என்ற சேந்தன்குடி ஜமீன்தார் அவர்களின் வீரச்செயல், தெய்வப்பக்தி பற்றி பாடுகிறது.
இதுதவிர, கல்யாணப்பாட்டு, ஆனந்தக் களிப்பு, மதுவிலக்குப்பாட்டு, மாபுயற்சிந்து, அறுகொலைச்சிந்து, மகாத்மா காந்தியின் மரணகீதம், அரிபக்த சதகம், ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.
1942 முதல் 1955 இடைப்பட்ட காலத்தில் தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்த அவர் 1956 இல் மண்ணுலகை விட்டு மறைந்தார்.
நடேசக் கோனார் நாட்டுப்புறப் பாடல்கள் எனும் தொகுப்பில் ஒரு பாடல்
தலைப்பு - பண்டாரத்தார் விஜயனை சேந்தன்குடி ஜெமீனாக்குதல்.
பண்டாரத்தாரும் சந்தோஷம் கொண்டாராம்பாரும்
பட்டுமழவராயர் படைகளைவாளினால்
வெட்டிக் கெலித்துமே வென்ற விஜயனை
ஆறுகிரா மங்கள்கொடுத்தே கொடுத்தே-ஜெமீன்
ஆடம்பர மாக்கநினைத்தே நினைத்தே
சொல்லுங் குளமங்களம் பலவளஞ் சூழுங் கொற்றமங்கலம்
நல்லபனங்குளம் நகரமெனுந்தலம்
நாலுதிக்கும்புகழ் நவில்கீரமங்கலம்
சேந்தன்குடி ஊரையும்சுட்டி சுட்டி -அதில்
சிறப்புடனே அரண்மனை கட்டி - கட்டி
ஆறுகிராமத்துக்கு-அதிபதி - யாகவிஜயனுக்கு
அரசர்குளம் ஜெமீன் அதிகாரமுடி சூட்டி
அவரேசொன்ன விஜய ரெகுநாதவழுவாட்டி
தேவரென்றே தேசம்புகழ புகழ - பெற்ற
தாய்பொன்னம்மாள் கண்டுமகிழ மகிழ
சேந்தன்குடி ஜெமினாம்-விஜயன் சீர்த்தி மிகுந்தவராம்
ஏந்தியவாளினால் எதிராளிகளைவென்று
வேந்தரும்வியப்புற வெற்றிபெற்றாரென்று
அன்றுமுத லின்றுவரைக்கும்- மக்கள்
அரியகதை யாகவுரைக்கும் உரைக்கும்.


கருத்துகள்
கருத்துரையிடுக