புதுக்கோட்டை எழுத்தாளர் – 132
சி. செகநாதன், அருளகம், திலகர் திடல், புதுக்கோட்டை. அருட்பா அவதானி, திருமந்திரச் செம்மல் பட்டங்களால் அறியப்படுகிறார். புத்தகங்களுக்குச் செலவிடும் பணம் செலவல்ல, அறிவின் முதலீடு என்பதை மக்கள் மத்தியில் சொல்லிக்கொண்டிருப்பவர். அருட்பெருஞ்சோதி அகவல் இனிய எளிய உரை, சிவபுராணம் ஞான உரை, விநாயகர் அகவல் ஞான உரை, அறியத்தக்க ஆயிரம் – தொகுதி -1, அருட்பாவில் அறியத்தக்க ஆயிரம் தொகுதி – 2, வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்த வரங்கள், திருக்குறள் சன்மார்க்க உரை, வள்ளலார் பிள்ளைத்தமிழ், அருட்பெருஞ்ஜோதி அகவலில் அறியத்தக்க ஆயிரம் தொகுதி-4, மங்கைபாகர் – தேனம்மை அருள் அந்தாதி, அருவியூர் நகரத்தார் அம்மானை ஆகிய நூல்களின் ஆசிரியர்.நீங்களும் வள்ளலார் ஆக,..எனும் இந்நூல் வள்ளலாரை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்நூல் எழுதுவதற்கான காரணத்தை இவ்வாறு என்னுரை தருகிறார். வள்ளற் பெருமானுடைய அருமை பெருமைகளை அரிய உண்மைகளை அருட்பாவை ஆராய்ந்து தெரிந்து அதனை மேடைகளில் பேசும் பொழுதும், பேசி முடித்த பின்னரும் பலர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேட்கும் கேள்வி, “ வள்ளலாருக்குப் பின்னர் வந்த 190 ஆண்டுகளாக யாரேனும் ஒருவர் அவர் போன்று வந்துள்ளாரா?” என்பதே ஆகும். இப்படிப்பட்ட கேள்வி அவர்களுக்குள் எழுந்த இனம் புரியாத, அவா மிகுந்த கேள்வி என எண்ணிக்கொள்வேன்.
இக்கேள்விக்குச் சரியான பதிலை என் உளம் தேடிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் வள்ளலாரைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது ஐயோ பாவம்! இந்த ஜனங்கள் இறைவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாததினாலேதான் நம்மை இறைவன் எனச் சுற்றுகிறார்கள் என்று அவர் தம் கருத்து என்னுள் பளிச்சிட்டது.
ஆம்! ஆம்! இந்த மக்கள் வள்ளலாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததினால் அல்லவா, இன்னுமொரு வள்ளலாரைத் தேடி அலைகிறார்கள். ஐயோ பாவம் என எண்ணினேன். இவர்கள் வள்ளலாரை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வார்கள்?அல்லது நம்மால் இவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? எனச் ஊன்றிச் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த நூல், என்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக