புதுக்கோட்டை எழுத்தாளர் - 137
ச.சிக்கந்தர் பாட்ஷா. அறந்தாங்கி. வணிகத் தொழில் செய்கிறார். தற்போது இவரது வயது 70. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணக் கடமையை மேற்கொண்டவர். 2009 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதன் அனுபவமே இந்நூல்.காணக் கண் கோடி வேண்டும் (கஅபா), இவரது முதல் நூல். இந்நூல் எழுத இவருக்குப் பத்து ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. பொருள் வளம், உடல் நலம் உள்ளவருக்கு ஹஜ் கடமை ஆகும். மற்றவர்களுக்குக் கடமை இல்லை என்கிறார். ஹஜ் என்றால் அது ஒரு எட்டாக் கனி, நாம் அதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். அது குறித்து ஏதும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இஸ்லாம் ஐந்து கடமைகளைப் போதிக்கிறது. கலிமா, தொழுகை,நோன்பு,ஜக்காத்து, ஹஜ். முதல் நான்கு கடமைகள் இறக்கும் வரை செய்துகொண்டிருக்க வேண்டும். ஐந்தாம் கடமை ஒரு முறை செய்ததும் அத்துடன் முற்றுப்பெற்று நன்மைகள் எழுதப்படுகிறது, என்கிறார்.
புனித ஹஜ் பற்றி இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டேன் . அனைத்து மக்களும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்று ஆவலில் உந்தப்பட்டு முற்றிலும் தனித்தன்மையுடன் இதை எழுதி உள்ளேன். இந்நூலை வாசிக்கையில் மக்கா, மதீனா சென்று ஹஜ், உம்ரா, ஜியாரத் பார்த்து திரும்பிய அனுபவத்தைப் பெறுவீர்கள், என்கிறார்.
பூமியில் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் பூமி முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது. அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது. அவ்விடத்தில்தான், கஅபா நிர்ணயிக்கப்பட்டது. இந்த கஅபா பல முறை சேதமுற்றது. பலராலும் இது புதுப்பிக்கப்பட்டது. இதன் மொத்த உயரம் 53 அடி நீளம் , மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி, தெற்கில் 41 அடி.
700 ஆண்டுகளுக்கு முன்பு யமன் நாட்டு மன்னன் துப்பஉல் அஸத் என்பவர் முதன் முதலாக கஅபா போர்வையால் போர்த்திக் கவுரவித்தார். இந்தக் கருப்புப் போர்வை கிஸ்வா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போர்வையின் தற்போதைய எடை 670 கிலோ. இது உயர் ரகம் பட்டால் ஆனது. இதன் மீது தங்கம், வெள்ளியால் திருமறை வசனம் எழுதப்பட்டுள்ளது, என்கிற தகவலைத் தருகிறது இந்நூல்.
ஹஜ் பயணம் செல்வோர் செய்ய வேண்டியது . பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும். கடனாளியாக இருப்பவர்கள் செல்லக் கூடாது. தான, தர்மம் அதிகமாகச் செய்ய வேண்டும். யாரிடத்திலும் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். யாருக்கேனும் குற்றம் குறை செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தில்தான் ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும், என பல தகவல்களைக் கொண்ட தரும் நூலாக இருக்கிறது. மேலும் இந்நூலின் வழியே அரேபிய நாடுகளின் வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக