புதுக்கோட்டை எழுத்தாளர் – 143
சாமி கிரிஷ், இயற்பெயர் – சாமியப்பன் முத்துக்கிருஷ்ணன். கவிஞர், குறும்பட இயக்குநர், திறனாய்வாளர், சிறார் சிறுகதையாளர். பிறப்பு - இடையாத்தி மேற்கு – நெய்வேலி. கரம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமுஎகச மாவட்டச் செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரம்பக்குடி கிளை செயலாளர்.கவிஞர் ஸ்டாலின் சரவணனின் தேவதைகளின் வீடு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதன் பிறகு கவிதைகள் மீதான ஆர்வத்தால் எழுதத் தொடங்கினேன், என்கிறார். ஆனந்த விகடன், குங்குமம், கணையாழி, பேசும் புதிய சக்தி, காமதேனு, புரவி உள்ளிட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
துருவேறிய தூரிகைகள், பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள் என்கிற இரு கவிதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார். துருவேறிய தூரிகை கவிதை நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் படைப்பூக்க விருது பெற்றவர். இவரது சிறார் சிறுகதையான கூர்ப்பி இவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த குறும்படமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்றது.
பட்டாம்பூச்சியின் புகைப்படப் ப்ரியங்கள், எனும் கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கவிதை உறவு இதழ் விருது பெற்றது. மேலும் படைப்பு தகவு குழுமம் நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு கவிதைப் போட்டியில் இவரது கவிதை முதல் பரிசு பெற்றது.
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள், எனும் இத்தொகுப்பு கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. தேநீர் பதிப்பகம். பாசத்தை மட்டுமே பரிமாறத் தெரிந்த அம்மாவுக்கும் பிரிந்து சென்றுவிட்ட அப்பாவுக்கும் ப்ரியமான இதழ் ஆனந்த விகடனுக்கும் இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அன்பிற்காய் ஏங்கித் தவிக்கும் மனித வாழ்வில் இவரது கவிதைகள் பெருமழையாய் அன்புகளைப் பொழிகின்றன.
இவரது முதல் தொகுப்பான துருவேறிய தூரிகைகள் வெளியிட்ட மறுநாள் இவரது தந்தை இறந்துவிட பெரும் துக்கத்திற்கு உள்ளாகி கவிதை மணத்திலிருந்து வெகு தூரத்திற்குச் சென்றுவிடுகிறார் சாமி கிரிஷ். இனி எதையும் வாசிக்கவோ, எழுதவோ முடியாது என்கிற சூன்யத்திற்குள் இவரது வாழ்வுச் சிக்கிக்கொள்ள ஆனந்த விகடன் இவரது விரலைப் பற்றி மீண்டும் கவிதை உலகத்திற்குள் அழைத்துவருகிறது. இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் ஆனந்த விகடனில் வெளியானவை. அன்பு, பாசம், நெருக்கம், இணக்கம், பற்று, நேசம் என நேய உணர்வுகளைப் பாடும் கவிதைகள் இவருடையது. இத்தொகுப்பில் ஒரு கவிதை – அப்பாவின் வாசம் –
அப்பா கொடுக்கும் முத்தங்களில்
பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்
சட்டைப்பை துழாவி அவர் தரும்
ஒன்றிரண்டு காசுகளில் கூட
பீடி வாசனையே பிசுபிசுக்கும்
இடைவெளியென்றி
வாயில் மினுமினுக்கும்
செந்நிற தீக்கங்குகள்
பீடியைவிடவும் அதிகம் எரித்தது
அவரது நுரையீரல்களைத்தான்
தினமும் போட்டு வதைக்கும்
இருமல் இரைச்சல்களில்
எங்களது அக்கறைகளும் அறிவுரைகளும்
அவர் காதுகளைச் சேரவேயில்லை
கடைசிப்பீடி வாயிலிருக்க
அப்படியே இறந்துபோன அப்பா
இப்போதும் ஆவியாக
அடிக்கடி வந்துபோகிறார்
யாரோ ஒருவர் உள்ளிழுத்துவிடும்
புகை வழியாக.

கருத்துகள்
கருத்துரையிடுக