புதுக்கோட்டை எழுத்தாளர் - 129
பெ.சசிக்குமார், இளங்கவி என அறியப்படுகிறவர். குடுமியான்மலைக்கும் அருகில் பரம்பூர் இவரது கிராமம். பெருமாநாடு சுதர்சன் கலைக் கல்லூரியின் முதுகலை மாணவர். கவிதை எழுத ஆர்வம் ஏற்படுத்தியவர்களாக திருவாளர்கள் முத்தழகன், கோவிந்தம்மாள் இருவரையும் குறிப்பிடுகிறார். இருவரும் கல்லூரி பேராசிரியர்கள். அவர்கள் அவ்வபோது குறிப்பிட்டு பேசும் நூல்கள் மீதான விமர்சனங்கள் தன்னை கவிஞராக மாற்றியது எனும் இவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஆதர்சமாக இருக்கிறார்.
தாக்கம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூல் குறித்து தன்னுரையில் குறிப்பிடும் இவர், எனக்குள் ஏற்பட்ட தாக்கமே இந்நூல் என்கிறார். முதுமை, விபத்து, கஜா புயல், கல்லூரி, காதல், வண்ணத்துப்பூச்சி என பலவற்றையும் பாடியுள்ளார். எல்லாம் எந்த இலக்கணத்திற்குள் அடங்காத புதுக்கவிதைகள். நீளக்கவிதைகளும் கூட.
இத்தொகுப்பில் ஒரு கவிதை,
மரங்களின் ஏக்கம்
ஓ மரங்களே உங்களுக்கும்
காதல் உண்டா?
காற்றுப்பட்டு நடனமாடும்
உமக்கா காதலில்லை?
தனித்தனியே வளர்ந்து
தவிக்கிறாயா இணைவதற்கு ?
உன்னை உரசிச் செல்லும் பட்டாம்பூச்சிக்குக் கூடவா
உம் வேதனை தெரியவில்லை?
இலையை உதிர்த்து
சருகாய் கண்ணீர்
வடிக்கின்றாயே!
காதலியின் பிரிவு சற்று
கடினம் தான்
காத்திரு உனக்கென்று ஓர்
புயல் உருவாகாதா என்ன?
உந்தன் தவிப்பை
நான் அறிவேன்!
காரணம் நானும் இணையத்
துடிக்கும் காதலன் தான்...!

கருத்துகள்
கருத்துரையிடுக