புதுக்கோட்டை எழுத்தாளர் – 152
கலியராஜன், புதுக்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தையார் திருமலைச்சாமி அஞ்சல் துறையில் பணியாற்றியவர். இவரது இளமைக் காலம் புதுவயல், கண்டனூர், பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான் என புதுக்கோட்டையையொட்டியுள்ள செட்டிநாட்டு ஊர்களில் கழிந்தது.பள்ளிப் படிப்பைப் புதுக்கோட்டையில் முடித்த இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொறியியல் படித்தார். அப்போது இவருடன் வகுப்புத் தோழராகப் படித்தவர்கள் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள். பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. உடுமலை அமராவதி அணைக்கட்டுத் திட்டத்தில் பங்கேற்று பணியாற்றினார்.
பின்னர் காரைக்குடி, மதுரை தூத்துக்குடி, கோவை, உதகை போன்ற நகரங்களில் பாலிடெக்னிக் முதல்வராகப் பணியாற்றி 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பணியின் பொருட்டு கோவையில் குடியேறி கோவைவாசியானாலும் இவர் எழுதும் நூல்களில் தன்னைப் புதுக்கோட்டைக்காரர் என அடையாளப்படுத்திக்கொள்கிறார்.
பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்ப் பணியில் ஈடுபட்டு எழுதத் தொடங்கி இவர் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.
தெரிந்த திருக்குறளும் தெரியாத புதிய பொருளும், எனும் இந்நூல் திருக்குறளைப் பலநோக்கில் ஆராய்கிறது. 1. தெரிந்த குறளும் தெரியாத பொருளும், 2.மேலும் சில பொருள் தெரியாத குறள்கள், 3.உபமானம் எது, உபமேயம் எது, 4.சமத்துவச் சிந்தனைகள், 5.விஞ்ஞானம் ஒரு வேதம், தொழுது எழுக, 6.வள்ளுவரின் குருபூஜை, திருச்சாழல் பற்றிய உண்மை, 7.தனி உடைமையும் பொது உடைமையும், 8. சமணர்கள் என்ன ஆனார்கள், 9.தமிழர்களின் மதம் எது? ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் திருக்குறளை அலசுகிறது.
கடுகைத் துழைத்து ஏழ்கடலைப் புகட்டிக் / குறுகத் தறித்த குறள்
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்
என திருக்குறளைப் பற்றி 54 பாடல்கள் திருவள்ளுவமாலையில் பாடப்பட்டுள்ளன. ஒரு நூலுக்கு 54 புலவர்கள் வாழ்த்துப் பாடியது திருக்குறளைத் தவிர வேறெந்த நூலுக்கும் இல்லை, எனப் பெருமையில் பூரிக்கிறார்.
திருக்குறளில் பல குறள்கள் தவறாகப் பொருள்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படியாக பொருள்கொள்ளும் பல குறள்களை எடுத்தாண்டு புதிய பொருள் விளக்கம் தருகிறார். உதாரணமாக, நீத்தார் பெருமை அதிகாரத்தில், ஒரு குறள்.
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் / செந்தண்மை பூண்டுஒழுக லான்.
பரிமேலழகர் அந்தணர் என்பவர்கள் துறவிகள் என்றும் அவர்கள் பிராமணர்கள் என்கிற பொருளில் மறைமுக விளக்கம் தருகிறார். அதை மறுக்கும் இவர், அம்+தண்+அர் அழகிய தன்மை உடையவர்கள், குளிர்ச்சியான தன்மை உடையவர்கள், ஒழுக்கமுடையவர்கள் என்கிறார்.


கருத்துகள்
கருத்துரையிடுக