புதுக்கோட்டை எழுத்தாளர் -156
வீ. மாரிமுத்து, வீரையா - மாரிக்கண்ணு இவர்களின் மகனார். கவிஞர், ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் பணியாற்றுகிறார். மாங்கனாம்பட்டி, வம்பன் காலனி, ஆலங்குடி.
சிவப்புக்கோடிட்ட பாடங்களில் தேர்ச்சி...எனும் இந்நூல் கவிஞரின் முதல் தொகுப்பு. முனைவர் சு. மாதவன் அவர்கள் நூலின் அணிந்துரையோடு தன் மாணவன் என்கிற பெருமையில் அவரது கவிமையைக் கண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார்.
கவிமாரிப் பொழிய வருகிறான்
கவி மாரி...
இவனிடம் கவிமேகங்கள் கருக்கொண்டுள்ளன
இது தொடக்கமழை!
இனிமேல் தொடர் மழைதான் எதிர்பாருங்கள்
முத்துக்கள் விதைப்பான்
வித்தைகள் சமைப்பான்
எத்திக்கும் நிறைப்பான்!
வாழ்க! வளர்க!சிறக்க!, என்று.
வாழ்த்துரை தந்திருக்கும் கவிஞர் வம்பன் செபாவுக்கு இவர் கவிதைக்குழந்தையாகவும் இவரது விரல் பிடித்து நடந்து இவர் பிடிக்கும் பேனாவையும் பிடித்தவராக இருக்கிறார். செபா- வின் வேரில் துளிர்த்த இணைமரம் வீ.மாரிமுத்து, இதை நினைக்கவே நெஞ்சு பூச்சொரிகிறது.
இவரது கவிதைகள் காதல், ஏழ்மை, சமத்துவம், நட்பு, உறவுகள், தமிழ், விவசாயம் என்று பலதையும் பேசுகிறது
இந்நூலின் பல கவிதைகள் பக்கங்களை நிறைத்து, வாசிப்பவரை நிறைத்து, கண்களையும் நிறைக்கிறது. அதிலொரு கவிதை
தலைப்பு - விவசாயி தற்கொலை
உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்குக்கூட மிஞ்சுவதில்லையாம்
உழக்கென்ன உழக்கு
உயிரும் இப்போது
மிஞ்சுவதில்லையே.

கருத்துகள்
கருத்துரையிடுக