புதுக்கோட்டை எழுத்தாளர் - 147
புலவர் ந. சண்முகம், தமிழாசிரியர், அய்யர் குளம் - வடகரை, புதுக்கோட்டை.மெய்யுணர்வும் பேரின்ப வாழ்வும் - மார்க்க அரேபியா அருளிய ஆத்ம சிந்தனை எனும் இந்நூல் மார்க்க அரேலியர் அருளிய ஆத்ம சிந்தனை எனும் மூல நூலின் செய்யுள் வடிவமாகும்.
நூலின் மூலம் உரோம நாட்டுச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியர் இயற்றியது. இவர் கி.பி 121 இல் பிறந்து நாற்பதாவது வயதில் ரோமாபுரி சக்கரவர்த்தியாகி கி.பி 180 இல் மறைந்தவர். ஒரு மாமன்னனுக்குரிய கடமைகளிலிருந்து சிறிதும் வழுவாமல் அரண்மனை வாழ்க்கையினின்று விலகிவிடாமல் அன்பு, பணிவு, அடக்கம், சகிப்புத்தன்மை , உழைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக சுக போகங்களைத் துச்சமாக மதித்து மேற்கொண்ட எளிமை முதலான பண்புகளில் சிறந்து விளங்கியவர். இவர் அருளிய தத்துவமே ஆத்ம சிந்தனை.
இந்நூலைத் தமிழில் மூதறிஞர் ராஜாஜி தமிழுக்கு மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு பரலி சு. நெல்லையப்பர் ஆசிரியராக இருந்த லோகோபகாரி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. தமிழகத்தின் காந்தி என அழைக்கப்பட்ட பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை இதே நூலை இதய உணர்ச்சி என்கிற தலைப்பில் வெளியிட்டார்.
ஆத்ம சிந்தனை என்கிற நூலை மூலமாக வைத்து புலவர் ந. சண்முகம் மரபு வழியில் செய்யுள் வடிவில் எழுதிய நூல் மெய்யுணர்வும் பேரின்பவாழ்வும். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கிறார் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
இந்நூல் பிரபஞ்ச இயல், சமுதாய இயல், ஆன்ம இயல் அல்லது உயிர் இயல் என மூன்று இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பிரபஞ்ச இயல் - இறையருள் வாழ்த்து, இறையருள் ஆட்சி, இறப்பின் சிறப்பு
சமுதாய இயல் - ஆன்ற நற்பண்புகள், சினங்கொள்ளாமை, பொறுமையின் பெருமை, கடமையுணர்வு, உயிர் ஒப்புணர்வு,
உயிர் இயல் - உலகின் நிலையாமை, தவக்கனலாம் துயர்க்கனல், ஐயம்இல் மெய்யுணர்வு,அமைதிப் பெருநிலை, பேரின்ப வாழ்வு ஆகிய தலைப்புகளின் கீழ் பாடப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் ஒரு பாடல்,
ஆறென்றால் இரு கரைகள் என்றும் உண்டாம்!
அதுபோன்ற பிறப்பென்றால் இறப்பும் உண்டு!
பேறாகும் புகழோடும் இகழ்ச்சி உண்டாம்! பீடுபெறும் நன்மையொடும் தீமை உண்டு!
மாறுபடும் இவ்வுலகில் பொருள்கள் யாவும்
மாறாத நியதியினில் மாறிச் செல்லக் கூறுபோடும் இவ்விருமை நிலையைத் தெய்வம்
குறிப்பாக இயற்கையினில் வைத்த தன்றோ?

கருத்துகள்
கருத்துரையிடுக