புதுக்கோட்டை எழுத்தாளர் - 161
இந்தியன் கணேசன், இயற்பெயர் கணேசன். மணமேல்குடி. இவர் நடத்தும் கடையின் பெயர் இந்தியன். இப்பெயரைக்கொண்டு இந்தியன் கணேசன் என அறியப்படுகிறார்.தான் சுவைத்து தனக்குப் பிடித்த கறியை சிவனுக்குப் படைத்த கண்ணப்ப நாயனாரைப் போல தான் வாசித்து பேரின்பம் கண்ட நூல்களைத் தன் கடைக்கு வரும வாடிக்கையாளர்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறார். அதற்காக கடையில் நூலகத்திற்கென தனி அறை ஒதுக்கியிருக்கிறார். இவரது கடை நூலகம் குறித்து பல தொலைக்காட்சிகள் செய்தி வழியே கவனப்படுத்தியுள்ளன.
ஆர்ப்பாட்டமில்லாத கவிஞர். ஆழ்ந்த வாசிப்பாளர். சுருக்கமாக பேசவும் எழுதவும் செய்கிறவர். இவரது சுருக்கத்தில் செறிவு உண்டு. ஒற்றைக்கீற்று கவிதைத்தொகுப்பு மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
அவிழ்ந்தே கிடக்கும் கூந்தல், இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. பிரமிக்கத்தக்க எதுவும் எளிமையிலிருந்து தொடங்குவதைப் போல எளிமையான மொழிகளின் வழியே சொற்களால் சமூகத்தைத் தராசில் ஏற்றுகிறார். பல கவிதைகளில் சமூகத்தின் மீதான கோபம் நெடியாக அடிக்கிறது. நல்லவனை உழைக்கச் சொல்லும் / கெட்டவனைத் திருடச் சொல்லும் / பசி - என்கிற கவிதை இதற்கோர் உதாரணம்.
துளிகளின்/ ஒற்றுமை/ கடல் - என்கிற கவிதை ஒற்றுமைக்கான புதிய உவமை அல்லது மிகப்பெரிய உதாரணம்.
இப்படியான சிறிய, குறுகிய, சற்றே பெரிய கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் ஒரு கவிதை நமது மாவட்டத்தில் சமீபத்தில் தீண்டாமையின் பேரால் நடந்தேறிய ஒரு சம்பவத்தை நினைவூட்டி வாசிப்பவர்களையும் விட்டிலாக்கி விடுகிறது.
கவிதையின் தலைப்பு - விட்டில்கள்
நல்லது செய்வான்
என்றெண்ணி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த
வாக்காளர்கள் !
பொன் முட்டையிடும்
என்றெண்ணி
ஈமுவில் முதலீடு செய்த
இளம் வணிகர்கள்!
நம்மைத்தான் கவனிப்பான்
என்றெண்ணி படாத பாடுபட்டுப்
படிக்க வைத்து விட்டு
முதியோர் இல்லத்தில் இருக்கும் பெற்றோர்கள் !
பணக்காரன் ஆகலாம்
என்றெண்ணி
திடீர் நிதி நிறுவனத்தில்
முதலீடு செய்தவர்கள்!
ஆசிரியர் படிப்பில்
தேர்ச்சி பெற்றால்
வேலை நிச்சயம்
என்றெண்ணி
தேர்வான மாணவர்கள்!
'சம பந்தியில் தன்னோடு
சாப்பிட்டதால்
சாதி ஒழிந்தது
என்றெண்ணிய தாழ்த்தப்பட்டவர்கள்'!
இவர்கள்...
வெளிச்சம் என்றெண்ணி
வெந்தனலில் விழுந்த
விட்டில்களே.

கருத்துகள்
கருத்துரையிடுக