புதுக்கோட்டை எழுத்தாளர் - 165
கோவில் குணா, ஆவுடையார்கோவில் சீ. குணசேகரன் என்பதன் சுருக்கமே கோவில் குணா. கணக்குப் பதிவியல் - வணிகவியல் படித்தவர். சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் செயலாற்றியவர். கவிஞர், சிறுகதையாளர், பேச்சாளர். கலை, இலக்கியம் மீதான ஈடுபாட்டால் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கலையாற்றி வருகிறார். இப்பெருமன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.
இவரது முதல் சிறுகதை, ராஜாளிக்குள் ஒரு சின்னப்புறா கல்கி இதழில் பிரசுரமானது. தாமரை, தொடரும் என்று பல இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது சிறுகதைகளில் ஒன்றான 'பரிசு ' கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மூன்றாண்டுகள் இடம் பெற்றிருந்தது.
ஏமாற்றம் இவரது படைப்புகளில் முக்கியமான ஒரு சிறுகதை. இக்கதை தொடரும்,..ஒளித்திரள் பன்னிரெண்டாம் ஆண்டு சிறப்பு மலரில் இடம் பெற்றது.
மழைக்காலத்தில் கொடலைமட்டை, பாலித்தீன் பையுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் குப்புசாமி எனும் ஏழை மாணவன் குடையுடன் பள்ளிக்கு வருகிறான். குடை தரும் கௌரவத்தில் பள்ளியில் அவன் செய்யும் குறும்புகளே இக்கதை.
ஆயிரமாயிரம் மாணவர்கள் ஒரே அறைக்குள் இருந்து கொண்டு கத்துவதைப்போல பெரிதாக வானம் இரைந்து கொண்டிருந்தது, கார் முகிலைக் கண்ட மயில் மாதிரி ஏக மகிழ்ச்சி, தேன் குடித்த நரியாட்டம் குதியாட்டம், ...போன்ற உவமைச் சொல்லாடல்களால் கதையின் வாசிப்பில் சுவாரசியம் கூட்டுகிறது.
குப்புசாமி குடையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் அடத்தால் குடையை வாங்கி வைத்துக்கொள்கிறார் ஆசிரியர். குடையை எப்படியேனும் வாங்கியாக வேண்டுமென யோசிக்கிறான். அந்நேரத்தில் மழை பெய்கிறது. உதட்டில் ஒரு விரலை வைத்துக்கொண்டு, சார்..என்கிறான்.
" ஏலே போய் சும்மா உக்காருல்ல. வெளியே மழை கொட்டிக்கிட்ருக்கு இவருக்கு 'இது' வருதாமுள்ள இது. சாத்துனேன்னா தெரியும் படவா " என்று கத்துகிற இடத்தில் கதை எதிர்பாரா திருப்பம் கொள்கிறது.
பள்ளி வயது குழந்தைகளின் உளவியலைப் பேசும் மிக முக்கியமான சிறுகதை. தொடர்ந்து எழுதுங்கள் கோவில் குணா. வாழ்த்துகள்,,,


கருத்துகள்
கருத்துரையிடுக