புதுக்கோட்டை எழுத்தாளர் - 167
நா. கண்ணன், கவித்தென்றல் நா.கண்ணன் என அழைக்கப்படுகிறவர். இவரது இலக்கிய வட்ட நண்பர்களால் சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெறுபவர். அறந்தாங்கியில் பிறந்து புதுக்கோட்டையில் குடியேற்றம். இவரது துணைவியார் தமிழாசிரியர். மகள் கவிதா புவனேஸ்வரி பட்டிமன்ற பேச்சாளர். மூத்த மகன் பாபு சண்முகநாதன் கராத்தே, சிலம்பு கலை பயிற்றுநர். இளைய மகன் முருகபாரதி சொல்லாட்சி கலைஞர். தன்னம்பிக்கை உரையாளர். யோசி என்கிற புத்தக நிலையம் நடத்துகிறார். மேலும் கவிராசன் அறக்கட்டளை மூலமாக சமூகத் தொண்டாற்றி வருகிறார்.நா.கண்ணன் மூன்று நூல்கள் எழுதியுள்ளார். வாழி ! தமிழே வாழி!, குமரேசனார் குறள், கவிராசனின் புவிவாசனை.
கவிராசனின் புவிவாசனை எனும் இந்நூல் இவரது மூன்றாவது நூல். கவிராசன் அறக்கட்டளை வெளியீடு. இந்நூல் பாரதியின் 125 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு வெளியானது. பாரதியின் வாழ்வை கவி வடிவில் வடிக்கப்பட்ட நூல்.
பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் , பாரதியுடன் தொடர்புடையவர்கள் கால வரிசையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி. சுப்பிரமணிய அய்யர் - சுதேசிமித்திரன், திருமலாச்சாரியார்- இந்தியா, லாலா லஜபதிராய்- பாஞ்சால சிங்கம், விபின் சந்திரபால்- பால் அவர்களில் முக்கியமானவர்கள். பாரதியைச் சுமந்தவர்களாக ஐவரைக் குறிப்பிடுகிறார். குவளைக் கண்ணன், லட்சுமண ஐயர், அரிகர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெல்லையப்பர்.
அருங்கவிஞன் பாரதிபால் அன்பு வைத்த பேர்க்கெல்லாம் ஆதரவாய் அவன் தாங்கும் அருந்தமிழின் வேர்க்கெல்லாம் இந்நூல் அன்பின் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.
இந்நூலுக்கு ஆசியுரை - புலவர் தி.சு. மலையப்பன், அணிந்துரை - கவிச்சுடர் கவிதைப்பித்தன், மதிப்புரை - கவிஞர் தங்கம்மூர்த்தி , , வாழ்த்துரை - கவிஞர் ப.முத்துப்பாண்டியன்.
இத்தொகுப்பில். பாரதி பற்றிய ஒரு கவிதை
தலைப்பு - பாரதியாய்த் தோற்றம்
சுப்பிர மணியன்
சூட்டிய பெயராய்!
சுப்பையா வெனச்
சுருங்கிய பெயராய்!
சூரியன் சுருங்குமா?
சூழ்ச்சியில் நொறுங்குமா?
வீரியம் சேரவான்
விளைக்குமா போருமாய்?
வெடிப்புறு பேச்சுமாய்
விரைகவி வீச்சுமாய்த்
துடிப்புறும் அவனைத்
தொழுதனர் 'அவனாய்'!
நடிப்பன வெண்ணி
நகைத்தனர் சிலரும்
இடிப்பெனும் மின்னாய்
இறங்கவும் வேண்டப்
பொழியுங் கவிதை
புரண்டது வெள்ளம்!
புண்மை யழுக்கெனப்
புரண்டவர் உள்ளம்!
தின்னும் புலியவன்
தினகரன் ஒளியவன்!
சின்னப் பயலெனச்
செப்பவும் ஒருவர்
அன்னவர் ஆக்கினன்
அணுவிலும் சின்னம்
ஆகவுந் தனதாய்
அருந்தமிழ் வண்ணம்!
எட்டயம் அவனது
பெட்டக மானது!
பட்டயம் அவனாய்ப்
'பாரதி'யானது!
எட்டும் வயதா?
பட்டயம் அதுதான்?
எட்டும் மூன்றாய்
எட்டு வயதான்
பத்தும் ஒன்றின்
பதினொன்று வயதாய்ப்
பார்தமிழ் மீண்டனள்
பதினெட்டு வயதாய்!

கருத்துகள்
கருத்துரையிடுக