புதுக்கோட்டை எழுத்தாளர் - 168
தீபம் முத்து, அறந்தாங்கி. கவிஞர், சிறுகதையாளர். தீபம் கலர்லேபில் பணியாற்றியதால் தீபம் முத்து என்று புனைப் பெயரை வைத்துக்கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இரு சிறுகதைத் தொகுப்பு , ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது வேப்பங்கொட்ட என்கிற சிறுகதை முதல் பரிசு பெற்றது. இக்கதையின் மூலமாக பரவலான கவனத்தை ஈர்த்தவர். சுற்றுச்சூழல், காடுகளின் அவசியம், கல்லூரி பருவத்தினர் பார்வையில் மரங்கள் வளர்ப்பு இவற்றைப் பேசக்கூடிய நல்ல சிறுகதை. இக்கதையை முதல் கதையாகக் கொண்டு வேப்பங்கொட்டை எனும் இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 2005 ஆம் ஆண்டு வெளியானது. 18 கதைகளின் தொகுப்பு. கடவாசல், எச்சில் உறவு, தொத்தப்பசு, சம்மணம், ஆணிவேர்...என வட்டார வழக்குகளால் எழுதப்பட்ட சிறுகதை.
இத்தொகுப்பில் ஆணிவேர் என்றொரு சிறுகதை காத்திரமான படைப்பு. ஊரின் மையத்திலிருக்கும் ஆலமரத்தை வெட்டி அவ்விடத்தில் சமுதாயக்கூடம் கட்ட ஊர்க்கூட்டம் போடுவதுதான் கதை. கதையின் களம் பச்சலூர். எங்கே நின்று பார்த்தாலும் பச்சைப் பசேலென்று இருந்ததால் அதற்கு பச்சலூர் என்று பெயர் என்பதாக கதையில் ஓரிடத்தில் சொல்கிறார். சோலியப்பன் மரங்களின் மீது அன்பும் பற்றும் பாசமும் கொண்டவர். ஊரே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த சம்மதம் தெரிவிக்க மரத்தை வெட்டக்கூடாதென்று சோலியப்பன் சொல்கிறார். மரத்தை வெட்டுவதென ஊர் முடிவு செய்கிறது.
பஞ்சாயத்து முடிந்து வீட்டுக்கு வருகிறார் சோலியப்பன். அவரது துணைவியார் சொல்கிறார். " இன்னக்கிச் சும்மாதானே இருக்கீக. வீட்டுமேல ஒரு பக்கத்து மொகட்டு சுவத்துல குருவிக எச்சம் போட்டதுல மொளைச்ச ஆலங்கண்ணு இடுப்புமட்டும் வளந்து செவரு வெடுச்சு நிக்குது. அதப் புடுங்கி எறிஞ்சாதான் என்ன?"
வேகமாய் சொன்னார் சோலி.
" போடி போடி போக்கத்தவளே வீடு போனா போகட்டும்"
வேகமாய் சொன்னார் சோலி.
" போடி போடி போக்கத்தவளே வீடு போனா போகட்டும்"

கருத்துகள்
கருத்துரையிடுக