புதுக்கோட்டை எழுத்தாளர் - 173,
வேங்கை ஆரோன், ஆலங்குடிக்கும் அருகில் வேங்கிடக்குளத்தில் சின்னப்பன் - மரிய ஆரோக்கியம் இணையர்களுக்குப் பிறந்த ஒரே மகன். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி பணிநிறைவு பெற்றிருக்கிறார்.2016 ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பிறகு கோயில் குளங்களுக்குச் சென்று பக்திப்பாடல்களாகப் பாடி காற்றை மென்படுத்தினார். அப்படியாக இவர் எழுதிய பாடல்கள் நூற்று ஐம்பதுக்கும் மேல். இவரது மருமகனார் விஞ்ஞானி ஆ.ஆபிரகாம் ஜோசப், பாடல்களுக்குப் பதிலாக கவிதைகளாக எழுதி நூலாக வெளியிடலாமே எனக் கேட்டுக்கொள்ள, இவரது கவனம் கவிதைகள் பக்கமாகத் திரும்பியது. சைவம், வைணவம், கிறிஸ்தவம் என்று பாடல் வடிவில் கவிதைகள் எழுதினார். அப்படியாக இறைவனைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை நானூறு. அவற்றில் எழுபத்தைந்து கவிதைகளைத் தேர்வு செய்து மெல்லத் திறந்த மதகுகள் என்கிற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இவரது வரிகளை வானவில்லின் வர்ண ஜாலங்களாக ஜொலிக்கும் கவிதைகள் என்கிறார். இந்நூலுக்கு வாழ்த்துரை தந்திருக்கும் கவிஞர் ஆண்டனி அவர்கள், காலத்தைக் கடத்த உட்காருபவன் அல்ல, காலம் கடந்தும் நிற்பவன் கவிஞன், அந்த முயற்சியில் வெற்றிக்கொடி நாட்டுவார், என வேங்கை ஆரோன் மீது நம்பிக்கை வைக்கிறார்.மேலுமொரு வாழ்த்துரை தந்திருக்கும் கவிஞர் மகா.சுந்தர் அவர்கள், மெல்லத் திறந்த மதகுகளின் வழியே வெள்ளமென ஓடிய கவிதைகள் என்கிறார்.
எழுபத்து நான்கு கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம். விலகாத உறவு, கண்ணியமிக்க காதல், மது மாது சூது, கைப்பேசி வேண்டாம் கண்ணே, நான் கண்ட கனவு, தேவகானம்,...என்று வசீகரமிக்கவை.
ஒவ்வொரு கவிதையும் சந்தக்கட்டுகளைக் கொண்டிருக்கின்றன. எதோ ஒரு மெட்டுக்குள் ராகத்திற்குள் வசப்படும் வரிகளாகின்றன. முத்தாய்ப்பாக ஒரு கவிதை.
தலைப்பு - தாலாட்டு
இக்கவிதை இப்படியாக நம்மைத் தாலாட்டுகிறது.
கவிதைகள் கட்டி
கதைகள் சொல்லி
உன்னை ஆற்றவா
காட்டுக்குயிலைப்
பாடச்சொல்லி
மெட்டுக்காட்டவா
கெட்டி மேளம்
கொட்டச் சொல்லி
சேர்ந்து ஆடவா
மலரைக் கண்டு
புனைந்து கட்டி
உனக்குச் சூடவா
பிஞ்சு இதழில்
கெஞ்சு மொழியில்
கொஞ்சி மகிழவா
தொட்டில் இட்டு
ஆட்டிவிட்டு
சுண்டி இழுக்கவா
ஐந்து விரல்களில்
ஆழியிட்டு
கண்டு மகிழவா
சின்ன இடையில்
அரையாணிட்டு
ஜோராய் காணவா
நெற்றிப் போட்டு
வண்ணமிட்டு
முத்தம் சிந்தவா
உன்னைக் கண்டு
அழகு கண்டு
சுத்தி போடவா

கருத்துகள்
கருத்துரையிடுக