புதுக்கோட்டை எழுத்தாளர் -174,
எஸ். ஆரோக்கியசாமி, பிறப்பிடம் - இராஜகுளத்தூர். தற்போது புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வருகிறார். இளமைக் காலத்திலிருந்தே சமூக நீதிப் போராளியாக இருந்து வரும் இவர், அரசியலில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்.உயிர்த்தெழுமா கம்யூனிசம் , மகாத்மா காந்தியோடு பெரியாரா? , பெரியார் பெரியாரா?, அரியணை ஏறிய பொய்கள், வர்ணம்-சாதி-தீண்டாமை இந்தியாவில் மட்டுமா?, அறவழிகாட்டும் ராமாயணம், மகாபாரதம் என நூல்கள் எழுதியுள்ளார். மேலும் சர்வோதயம் மலர்கிறது, தமிழர் எழுச்சி, தமிழக அரசியல், அத்திப்பூ போன்ற இதழ்களில் தொடர்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தியோடு பெரியாரா? எனும் இந்நூல் இவரது ஆறாவது நூல். தமிழக அரசியல் இதழில் வாரம் இருமுறையாக வெளியான தொடரின் தொகுப்பு.
காந்தி சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய பெரியார், 1948 இல் காந்தி மதம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்றும் பேசினார். பிறகு அதை மாற்றி காந்தியம் ஒழிய வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் உருப்படும் என்றார். இப்படிப்பட்டவர்தான் பெரியார் என்பதை எடுத்துச் சொல்வதற்கே இந்நூல், என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
மகாத்மா காந்தியோடு பெரியாரா?, தமிழ்மொழியை நேசித்த காந்தியும் வெறுத்த பெரியாரும், பெண் விடுதலையில் காந்தியிடமிருந்து முரண்பட்ட பெரியார், பெண்களை இழிவுபடுத்திய பெரியார், கம்யூனிசம் காந்தியின் பார்வையும் பெரியாரின் பார்வையும், பெரியாரின் விமர்சனத்தில் தரமற்ற சொற்கள், மதங்களுக்கு எதிராக பெரியார், இந்தியாவில் புத்தமதம் வேரூன்ற முடியாதது ஏன்? இப்படியான தலைப்புகளின் கட்டுரை நூல் இது .
முதல் கட்டுரை கீழ்வெண்மணி பற்றி பேசுகிறது.
1968 டிசம்பர் 25 அன்று வெண்மணியில் 44 அரிஜனங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இதில் முதல் குற்றவாளி இருஞ்சூர் நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு என்பது உலகுக்கே தெரியும் . இது எப்படி பெரியாருக்குத் தெரியாமல் போனது. அரிஜனங்கள் சாவுக்குக் காரணம் கூலி உயர்வுப் போராடிய கம்யூனிஸ்டுகள் என்றாரே பெரியார். அரிஜனங்களுக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார் பெரியார். குற்றவாளிக் கூண்டிலிருந்து கோபாலகிருஷ்ண நாயுடுவைக் காப்பாற்ற முயன்றார் பெரியார், இப்படியான பதிவுகளைக் கொண்ட இந்நூலுக்கு வாசகர்களின் மத்தியில் வரவேற்பும் உண்டு, எதிர்ப்பும் உண்டு.
பாபா பதிப்பகம் வழியே வெளிவந்திருக்கும் இந்நூல் காந்தி, பெரியாரை மறுபார்வைக்கு உட்படுத்துகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக