புதுக்கோட்டை எழுத்தாளர் -180
ஜானகி ராஜாயி சாஹேப், புதுக்கோட்டை தனியரசு அரசக் குடும்பத்து மகள். இவர் இயற்றிய கீர்த்தனைப் பாமாலை எனும் இந்நூல் புதுக்கோட்டை நாரதா மலையில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மீது பாடப்பட்ட சிந்து, பல்லவி, அநுபல்லவி, கும்மி வடிவில் பாடப்பட்ட பாமாலையின் தொகுப்பாகும். இந்நூலின் மூலம், இவர் ‘புதுக்கோட்டையின் முதல் பெண் நூலாசிரியர்’ என்கிற பெருமையைப் பெறுகிறார்.இந்நூல் திரிசிரபுரம் டீ சில்வா அச்சுயகதிரசாலையில் 1920 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. திரிசிரபுரம் என்பது திருச்சிராப்பள்ளி. இதிலிருந்து இவ்வாண்டு வரை தனியரசாக இயங்கிய புதுக்கோட்டையில் அச்சகங்களோ, பதிப்பகங்களோ இயங்கியிருக்கவில்லை என்பது உறுதியாகிறது.
புதுக்கோட்டை தொண்டைமான் குடும்பத்தினர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆயினும் அரசக் குடும்பத்து மகள் ஜானகி ராஜாயி சாஹேப், தமிழில் நன்கு சிறந்து விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இவர் குறித்து பிற குறிப்புகள் இல்லை என்றபோதினும், மாதாட பாரதேனோ என்ற வர்ணமெட்டில் கமாசு இராகத்தில் இயற்றியிருக்கும்
“சின்னுஞ் சிறுவயதில் செய்த பிழை பொறுத்தும்
என்னையாண்டருள் செய்ய இருதாள் மலர்பணிந்தும்
மன்னன்வாழ்புதுக்கோட்டைசொர்ணம்நிறைந்தநாட்டை
என்றும் நாரதகிரி ஈஸ்வரி நீயாதரி
பொன்னால் மகுடம் புனை புவியளந்தோன் தங்கைநீ
கன்னல்மொழி ஜானகி கவலை தீர்த்தாளவுன
என்கிற சரணம் மூலமும் பாடலின் மையத்தில், “ மங்கையாளுன் மகள் ஜானகி மகிமையுடன் மாதா துணை செய்வாய்” என்கிற வரியின் மூலமும் இவர் பெண்பாற்புலவர் என்பது உறுதியாகிறது.
“ பிணியால் வருந்து மென்னை தனியாள் விடாதபடி
துணிவாயுனைப் பணிந்தேன் துயரகற்றி நீயருள்” என்கிற வரியின் மூலம் இவர் தீராப்பிணியில் அல்லலுற்றாரோ, எனக் கருத முடிகிறது. அதற்கேற்ப,
“ தாயே மக மாயிநீ தயவு செய்குவாயே நீ
தாயே மக மாயி நீ தர்மகுண சீலி நீ” என இறைவனைக் கெஞ்சிப் பாடுகிறார்.
இவர் நாரதமலை மாரியம்மனுடன் அன்றைக்குப் புதுக்கோட்டை தனியரசின் மன்னராக திகழ்ந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானையும் பாடியுள்ளார்.
“ ஆதாரமான தெய்வம் மாதாபிதாவும் நீயென்
மார்த்தாண்ட பைரவனை காத்தாண்டருள் புரிவாய்”
இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் திரிசிரபுரம் அர்ச் சூசையப்பர் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் அ. சிவப்பிரகாசர் எழுதியுள்ளார்.
“மஞ்சுலவு நாரதா மலையில்வாழ் தேவியருண் மாரி மீதில்
நெஞ்சுருகு மிசைத்தமிழால் கீர்த்தனைப்பா மாலையுளம்
நெகிழ்ந்து சாத்தி
விஞ்சுபுக ழெய்தினள்நீள் புதுக்கோட்டை யதிபன்முன்
விளங்குஞ் சீர்த்தி
எஞ்சலிலின் மொழிபயின்ற ஜானகிரா ஜாயிநல் இறைவி மாதோ”
நாரதா மலை என்பது இன்று நார்த்தாமலை என்று அழைக்கப்படுகிறது. சோழர் ஆட்சிக்காலத்தில் விஜயாலய சோழீஸ்வரம் என அழைக்கப்பட்ட மலை, பிறகு நகரத்தார் மலை என்று அழைக்கப்பட்டது.
இந்நூலுக்கு சிறப்பாயிரம் எழுதிய அ. சிவப்பிரகாசர் நூலாசிரியரை எஞ்சலிலின் மொழிபயின்ற ஜானகி ராஜாயி என்கிறார். எஞ்சலிலின் என்கிற சொல் இங்கு எதைக் குறிக்கிறது, எனத் தேடுகையில், “ பழிஅஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை/ வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்” என்கிற திருக்குறள் நினைவுக்கு வருகிறது. இங்கு எஞ்சலிலின் மொழி பயின்ற ஜானகி என்கிற வரிக்கு ‘குறையாத மொழி பயின்ற ஜானகி ராஜாயி’ என்று பொருளாகிறது. இவர் குறிப்பிட்டுள்ளதைப் போன்று இந்நூல் அவரது தாய்மொழி தெலுங்கு சொற்களில்லாமல் அக்காலத்தில் தமிழ் மொழியோடு இரண்டறக் கலந்திருந்த வடமொழி அதிகம் கலப்பில்லாது நல்ல தமிழில் எழுதிய பாமாலையாக இருக்கிறது.
வேண்டல் - நான் தேடிய வரையில் இவரே புதுக்கோட்டையின் முதல் பெண் நூலாசிரியராகத் தெளிகிறார். மறுப்பிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக