புதுக்கோட்டை எழுத்தாளர் - 192
அ. அமீர்பாட்சா, அறந்தாங்கி. பிறப்பு - தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணி அடுத்த பூக்கொல்லை. தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். இளங்கலை சமூகவியல் படித்தவர். ஆன்மீகவியல் மற்றும் தத்துவவியலில் குறித்து உரையாற்றுவதில் விருப்பம் கொண்டவர்.மதங்களும் மானுடமும் எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு. நான்கு தலைப்புகளின் கீழ் மதம் மதம் சார்ந்த கற்பிதங்களை அலசுகிறார். 1.பகவத் கீதையும் கீதையை விமர்சிக்கும் மறுப்பக்கம் நூலுக்கு மறுப்புரையும், 2.இஸ்லாமிய மதமும் அதன் தத்துவ இயலும், 3.புத்தம் ஒரு புதிர், 4.பின்னுரையில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் பற்றிய சில கருத்துக்கள்.
உலகம் எப்படி இயங்குகிறது, என்று ஆராயாமல் உலகை இயக்குவது யார்? அதன் அடிப்படை என்ன? என்று ஆராய்ந்ததன் விளைவுதான், மானுடர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. மனிதன் என்பவன் இப்போது என்னவாக உள்ளானோ, அது அல்ல. இப்போது என்னவாக இல்லையோ, அதுதான் - போன்ற கருத்தியல்களால் இருத்தலியல் கோட்பாடுகளை விளக்குகிறார்.
கிரேக்க இதிகாச கதையில் ஸிஸிஃபஸ் எனும் கதாபாத்திரத்தைக் கொண்டு மனித வாழ்வு அபத்தமென சொல்கிறார் காம்யு. ஸிஸிஃபஸைத் தண்டிக்கும் விதமாக கடவுள் அவனுக்கொரு தண்டனை வழங்குகிறார். ஒரு பாறையை அவன் உருட்டிக்கொண்டு மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து அதைக் கீழே உருட்டிவிட வேண்டும்.மீண்டும் அதை மேலே கொண்டு போக வேண்டும். மறுபடியும் அதைக் கீழே உருட்டிவிட வேண்டும். இந்த வேலையை அவன் முடிவில்லாமல் செய்துகொண்டிருக்க வேண்டும். இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா,? இதைப் போன்றதுதான் மனித வாழ்க்கை.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைத் தத்துவ இயலாளர் அல்ஃபாராபி சொன்ன 'இருப்புத் தத்துவம்' கொண்டு விளக்குகிறார். "ஒரு பொருள் இருக்கிறது என்றால் அப்பொருளின் இருப்புக்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும் . இவ்விதம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு காரணத்துடன் இருக்கும். தன் இருப்புக்கு ஒரு காரணம் தேவையில்லாததுமான ஒரு பொருளே கடவுள் ஆகும்".
இப்படியான மதத் தத்துவங்கள், மதக்கோட்பாடுகள், எதிர்நிலை மறுப்புக் கோட்பாடுகள் இவற்றின் தொகுப்பு இந்நூல். 2007 ஆம் ஆண்டு இந்நூலை எழுதி முடித்து 2023 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார். Man is a bridge between Animal and Divine என்று ஓஷோ Man is combination of animaltity humanity and Divinity என்று விவேகானந்தர் சொன்ன இவ்விரு கருத்துகளும் இந்நூலுக்கு ஆதாரமாக உள்ளன.

கருத்துகள்
கருத்துரையிடுக