புதுக்கோட்டை எழுத்தாளர் - 186
புலவர் க.மு.சுந்தரகணேசன், துணைப் பேராசிரியர், மன்னர் கல்லூரி ,புதுக்கோட்டை. இவர் சக்திதாசன் என்கிற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் பழநி அந்தாதி முக்கியமானது.புதுக்கோட்டை நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத்தமிழ், எனும் இந்நூல் முதற்பதிப்பாக ஏப்ரல் 1972 இல் வெளியானது. தமிழக அரசு கல்லூரிக் கல்வி நெறியாளர் அனுமதி பெற்று வெளியானது. சேலம் மாவட்டம் எழில்மலர்ப் பதிப்பகம் மூலமாக வெளியான இந்நூலை புதுக்கோட்டை செந்தமிழ்ப் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டது.
இந்நூலுக்கு பதிப்புரை கு.பெ.மகாலிங்கம், அணிந்துரை தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கவிஞர்கோ, பாவலரேறு வித்துவான். ச. பாலசுந்தரம் அவர்கள்.
இந்நூலின் முன்னுரை இவ்வாறு பேசுகிறது.
இறைவழிபாடு, எம்குடும்பத்தாரின் அகத்தேயும் புறத்தேயும் நீங்காத சொத்து. இந்நிலையில் சத்திய சோதனையில் ஆழ்த்திய அன்னை பராசக்தி எம் உள்ளத்தில் அவளே நின்று பிள்ளைத்தமிழ் பாடத்தூண்டா விளக்காணாள். சத்திய சோதனையில் வென்றது - அவளோ? நாமோ? எல்லாம் அவளே; அவள் பிள்ளைத்தமிழ் பாடல் வெளிவர எம்மைத்துணையாக்கினாள் என உணர்கிறோம்.
இந்நூலை நாரதர்மலை மாரியம்மனுக்குப் படைக்கின்றோம். "பழநி அந்தாதி' யைப்போல் இதனையும் ஏற்று வெளியிட்டு உதவிய எழில் மலர்ப் பதிப்பகத்தாருக்கு, எனது நன்றியும் வணக்கமும் உரிய. அணிந்துரை தந்து சிறப்பித்த எனது கெழுதகு நண்பர் பாவலர் திரு ச. பாலசுந்தரம் அவர்கட்கு எனது நன்றியை உரித்தாக்கி, இதனை கற்று அன்னையின் அருள் பெறவேண்டுமெனத் தமிழ்ப் பயின்றார் எல்லோரையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
புதுக்கோட்டை 6-4-723
அன்பன்,
'சக்திதாசன்'
பிள்ளைத் தமிழ் பத்துப் பருவங்களில் ஒன்றான தாலப்பருவம் இவ்வாறு பாடுகிறது.
பொதிகைத் தென்றலு டன்போத்து
பொங்குந் தமிழை நனிவளர்க்கும்
புதுகை மன்னர் மடிவளர்ந்த
பொய்யா மொழியே செந்தமிழே!
எதுகை என்னும் பாவலர்க்கு
ஏற்ற கையாய் இனிதோங்கி
என்றும் அவர்தம் மதுகைக்கு
இனிமை சான்ற துணையானாய்!
மதிகைக் கொண்டு புலனடக்கி
மாலும் அயனும் காணரிய
மலரே! நாரதர் மலைவாழும்
மயிலே! என்றன் மனக்கோயில்
பதியாய் விழைந்து அமர்ந்தவளே பண்ணே, தாலே தாலேலோ
பயனே, அமுதே! பார்புகழும்
பாவாய் தாலே தாலேலோ.


கருத்துகள்
கருத்துரையிடுக