புதுக்கோட்டை எழுத்தாளர் -201
புத்தமித்திரர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து இருபத்தைந்து கல் தூரத்தில் தென்கிழக்கு கடற்கரையொட்டியுள்ள பொன்பற்றி எனும் ஊரில் பிறந்தவர். வீர ராசேந்திர சோழ மன்னன் அதிகாரத்திற்குட்பட்ட சிற்றரசராக ஆட்சிப்புரிந்தவர். புத்த மதத்தவர். இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி 1063 - 1070.இவர் வீரசோழியம் எனும் இலக்கண நூலைப் படைத்தார். இப்பெயர் வீர ராசேந்திர சோழனைக் குறிக்கும்.
"மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன், மெய்தவத்தால்
தொக்கவன், யார்க்கும் தொடரவொண்ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே "
எனும் வரும் முதற் செய்யுள் மூலம் இவர் பொன்பற்றி எனும் ஊரைச் சேர்ந்தவர் அறியமுடிகிறது.
"தேமேவிய தொங்கற் நேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமே லுரையப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே " என்று பாடியுள்ள அடிகள் மூலம் இந்நூலை இயற்றிவித்தவன் வீரராசேந்திர சோழ மன்னனாவான் என அறியமுடிகிறது.
வீரசோழியம் வடமொழி இலக்கண விதியைத் தன்னகத்தே கொண்ட நூல். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் எனும் ஐந்து இலக்கணங்களையும் ஐந்து அதிகாரங்களாகக் கூறுகிறது. இந்நூலுக்கு முதல் நூல் தொல்காப்பியமும் காவிய தரிசனம் எனும் வடமொழி நூலும் ஆகும்.
வீரசோழியம் கட்டளைக் கலித்துறை எனும் பாவால் அமையப்பெற்ற இலக்கண நூல். பெரும் பிரிவுகள் அதிகாரம். என்றும் உட்பிரிவுகள் படலம் என்றும் பெயர் பெறுகின்றன. சொல்லதிகாரம் ஆறு படலங்களை உடையது. மற்றவை ஒவ்வொரு படலமே. இந்நூல் மொத்தம் 181 செய்யுட்களைக் கொண்டது.
இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் நூலாகும். இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து அச்செடுத்து முதல் நூற்பதிப்பு கண்டது 1895 ஆம் ஆண்டு. சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக