புதுக்கோட்டை எழுத்தாளர் – 205
‘சக்தி’ சித்தார்த்தன். இவரது இயற்பெயர் கு.சிவசுப்பிரமணியன். இலக்கிய வித்தகர் என்று அழைக்கப்பட்டவர். பிறப்பு திருமயம். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். மாணவர் பருவத்தில் ‘சக்தி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியதால் பெயருக்கும் முன்னே சக்தி சேர்ந்துக்கொண்டது. மாணவர் பருவத்தில் ‘விவேகானந்தர்’ என்கிற கையெழுத்து பிரதியை நடத்தியவர். இவர் கடியாபட்டியில் படிக்கின்ற பொழுது அப்பள்ளிக்கு பெருந்தலைவர் காமரா்ஜர் வருகைத் தந்தார். அவ்விழாவில் பாரதியார் பாடலைப் பாடி பெருந்தலைவரிடம் பாராட்டுப் பெற்றவர். ‘கல்பனா’ என்ற மாத இதழுக்குச் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார்.தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தோழர் ஜீவானந்தம் தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றத்தில் ஈடுபாடு கொண்டு செயலாற்றியவர். மீ.சேதுராமன், புதுகைத் தென்றல் மு.தர்மராஜன் தொழிற்சங்கத் தலைவர் ஜகன் உடன் இணைந்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாரதி விழா நடத்தியிருக்கிறார்.
சித்தார்த்தன் இயல்பாகவே இசையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் ‘யாதும் ஊரே’. இந்நூல் சங்க காலத் தமிழர் வாழ்வைச் சித்தரிக்கிறது. பொதுவுடைமை கொள்கையில் மலர் வீசும் மலராக இருந்த இவர் எழுதிய நூல்கள் ஏராளம். அரசியல் தொழிற்சங்க பின்னணியில் ‘வைசாலி’. தென்மாநிலச் சாதி கலவரங்கள் பற்றி ‘காட்டுத்தீ’, தஞ்சை மாவட்ட இசைப் பின்னணியில் ‘ ஜீவன் முக்தன்’, பல்லவர் ஆட்சியின் மறைவும் சோழர் ஆட்சியின் எழுச்சியும் குறித்த ‘ செவ்வானம்’ யாவும் இவர் படைத்த நாவல்களில் முக்கியமானவை. இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு, ‘ ஒன்றிரண்டு மானிட ஜாதி’, ‘வானவில்’ தலைப்பில் மூன்று கவிதைத் தொகுப்புகளும், ‘காலச்சுவடுகள்’, ‘மீட்டும் ஒரு முறை’ எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
'சிங்கமும் சிறு குயிலும்’ எனும் தலைப்பில் ஒரு பயண காப்பியமும், ‘ எல்லைக்கு அப்பால்’, ‘ ஆழிசூழ் அமெரிக்கா’ என இரு பயண கட்டுரை நூல்களும் எழுதியவர். ‘ பொருநை எனும் கருணை’ என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த நாகரீகத்தைப் பற்றி இவர் எழுதிய காவியம் இவருக்குப் பெருமைத் தேடி தந்தது.
‘ ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்’ எனும் சிறார்களுக்கான பாடல் நூலையும் எழுதியவர். இதுதவிர, சுதந்திரப் பொன்னேடுகள், அக்னி, இன்று காந்தியம் என மூன்று கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார்.
பொருத்தம், வெள்ளாடு, இல்லாத இடமே இல்லை, அந்தமானும் சிந்துவும் என்ற இவரது நாடகங்கள் மேடையேறியுள்ளன. சென்னை பாரதி கலைக்கழகம் இவருக்குக் கவிமாமணி என்று பட்டம் வழங்கி கவுரவித்தது.
இவரது சமீப படைப்பு சமுத்திர குமாரர்கள் வரலாற்று நாவல் - 5 பாகங்கள். 2160 பக்கங்கள், பண்மொழி பதிப்பகம்.
புதுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர்களில் வாண்டுமாமாவிற்கு அடுத்து அதிக நூல்கள் எழுதிய எழுத்தாளர் இவர்,,,



.jpeg)
.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக