புதுக்கோட்டை எழுத்தாளர் - 207
ஆ.ப. சுவாமிநாத சர்மா. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை அடுத்த குடிக்காட்டில் செப்டம்பர் 4, 1900 அன்று பிறந்தவர். தமிழ்ப்புலவர். கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசியராகப் பணியாற்றியவர். முருகப் பக்தர். முருகன் மீது பல்வேறு தோத்திரப் பாடல்கள் பாடியவர்.இவர் எழுதிய நூல்களில் வரத கணேசர் தோத்திரப் பாமாலை, சுவாமிநாதன் தோத்திரக் கொத்து, குன்றை மும்மணிக் கோவை, சுவாமிநாதன் சித்திரக் கவிகள், கணிதம் பற்றி இவர் எழுதிய கணக்கியல் நூல்கள் முக்கியமானவை.
‘சந்தச் சரபச் சித்திரப் பாவல ஆசான், மதுரவரகவி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். இளம் வயதிலேயே இவருக்கு ஆசுகவியாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடும் ஆற்றல் வந்தது. தமது 23ம் வயதில் சுவாமிமலை முருகன் மீது பாடல்கள் புனைந்து அதை ‘சுவாமிநாதன் தோத்திரக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார்.
தொடர்ந்து ‘சித்திரக் கவி’ இலக்கணத்தைத் தாமாகவே பயின்று தேர்ந்தார். முரசு பந்தம், மயூர பந்தம், நாக பந்தம், அட்ட நாக பந்தம், கூடச் சதுக்க பந்தம், ரத பந்தம் என்று பல நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இவர் எழுதியிருக்கிறார்.
‘குன்றை மும்மணிக்கோவை, மயூர கிரி உலா, திருவேரகன் பதிகம், மால் அரன் மாலை மாற்று மாலை, புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் துதிப்பாசுரத் தொகை, கல்லம்பட்டி முத்து மாரியம்மன் துதிப்பாசுரத் தொகை, தேனிமலை முருகன் துதிப்பாசுரத் தொகை, வரத கணேசர் தோத்திரப் பாமாலை’ போன்றவை இவர் எழுதிய நூல்களாகும்.
நான்கு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருப்பது போல வரையும் சித்திரக்கவி ‘சதுர் நாக பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
நாகங்களின் தலையில் துவங்கி வாலில் முடிவதாகப் பாடப்படும் இது, கடினமான செய்யுள் வகையினுள் ஒன்று என்று சொல்லலாம். காரணம், எங்கெங்கு நாகங்களின் சந்திப்பு அமைகிறது, எங்கு என்ன எழுத்தை இட்டால் அது எல்லா இடங்களுக்கும் பொருந்தி செய்யுளுக்குப் பொருத்தமாக அமையும் என்றெல்லாம் எழுத்தெண்ணிப் பாடப்படுவது.
சான்றாக கலிவிருதத்தில் அமைந்த பாடலைப் படத்தில் பார்க்கலாம்.
மாதடி சேயமா வாகன வந்தருளா தவ தேனிந காகுக நாதசூர் மாதடி சேவக மானினி யாவளா வேதவி யாவகா வேலவ கந்தனே!
இதன் சுருக்கமான பொருள்:
பெரிய மயில் வாகனத்தில் வந்து அருள் புரியும் உமையாள் மகனே, தவம் மிகுந்தவனே, தேன் போன்ற இனிமையுடையவனே, நாகத்தைக் கொண்ட குகனே, சூரனை வென்ற நாதனே, அவனை சேவலாக உன்னடி பணித்தவனே, வேதம் உரைக்கக் கேட்பவனே வடிவேலவா, என் கந்தனே!”
19/07/1973ல், தனது எழுபத்து மூன்றாம் வயதில் இவர் காலமானார்.

கருத்துகள்
கருத்துரையிடுக