புதுக்கோட்டை எழுத்தாளர் – 212
சிற்பி சோமு, இயற்பெயர் எம். சோமசுந்தரம் ( 03.04.1945, பெற்றோர் – சி.முத்து, பிரகதாம்பாள் அம்மையார்) புதுக்கோட்டை மேலூர். சிற்பி சோமு, கௌசி மணவாளன், கௌசல்யா சோமசுந்தரம் ஆகிய புனைப் பெயர்களில் எழுதியவர்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், ஓவியம் என்று பல வடிவங்களில் படைப்புகள் தந்தவர். ஓவியப் படைப்பாளர் என்பதால் சிற்பி சோமு என்று அடையாளப்பட்டார். சுமார் ஆயிரத்திற்கும் மேல் நகைச்சுவை ஓவியங்களுடன் துணுக்கு எழுதியவர். இரு நூறுக்கும் மேல் சிறுகதைகள், ஐம்பதுக்கும் மேல் கட்டுரைகள், நூற்றுக்கும் மேல் கவிதைகள் எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களும் முப்பத்துக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களும் படைத்தவர். இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி லைலா என்கிற கவிதை இதழ் சிந்தனைச் செல்வர் என்கிற பட்டத்தை வழங்கியது.
அச்சுத் தொழில் ஆர்வம் கொண்ட இவர் 1983 ஆம் ஆண்டு சரவணா பிரசுரம் என்கிற அச்சகத்துடன் கூடிய பதிப்பகம் நடத்தினார். இந்தப் பிரசுரம் தெற்கு நான்காம் வீதியில் இயங்கியது. இதன் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இப்பிரசுரம் பற்றி டாக்டர் அன்னி தாமசு பதிப்பித்த எண்பத்து மூன்றில் தமிழ் எனும் நூல் பதிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை இளம் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டைக் கிளை இணைத் தலைவராகவும் செயலாற்றினார். ஆறு சிறுவர் கதைகள் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆறு சிறுகதைகள் தொகுப்பு ஒரு நாடகத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இவர் குறித்து புதுக்கோட்டை சாதனையாளர்கள் எனும் நூல் பதிவு செய்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக