புதுக்கோட்டை எழுத்தாளர் - 216
வைரநதி, இயற்பெயர் - வைர.ந.தினகரன். (பெற்றோர் - வைர.நமசிவாயம், யோகம்பாள் தம்பதியினர்). பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு வைரநதி என்று புனைபெயராக மாற்றிக்கொண்டவர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலுக்கு அருகில் 12 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எழுதிய புத்தமித்திரன் வாழ்ந்த புண்ணியபூமியாம் பொன்பேத்தி- பேரானவூரில் பிறந்தவர்.
சமூகவியல் மற்றும் நூலக தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்பொழுது நூலக தகவல் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) மேற்கொண்டுள்ளார்.
ஒரு நதியின் கீதம் (2007)
விழித்தெழு தமிழா ( 2009) என்று இரு நூல்கள் எழுதியுள்ளார்.
ஒரு நதியின் கீதம், எனும் இந்நூல் புற உலகவாழ்வில் தனது மனதைப் பாதித்தவைகளைக் கருவாகக் கொண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. கீதம் என்றால் என்ன? காதல் கீதமா? மகிழ்ச்சிக் கீதமா? சோகக் கீதமா? புரட்சிக் கீதமா? நதி கீதம் பாடுமா? நதி கீதம் பாடும். நதி பாடும் கீதத்தைக் கேட்டு ரசிப்பவர்கள் பலர் உண்டு. இந்த நதியின் கீதம் காதல், சோகம், புரட்சி, மகிழ்ச்சி, சமூகம், தேசியம் என்று தொகுக்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது சின்ன சின்னக் கவிதைகள் எழுதியவர் அரசியல், நகரத்து நிகழ்வுகள், நண்பர்களின் காதல் இவற்றை கவிதையாக எழுதி கவிஞரானவர். கவிதை என்பது எளிய பாமர மக்களுக்குப் புரியும் படியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். கவிதைகள் எழுதி அதற்கு விளக்கவுரை எழுத முனைவதில் எனக்கு உடன்பாடில்லை, என்கிறார். இந்நூலுக்கு கவிஞர் பாலா, கவிவேந்தர் மு.மேத்தா முன்னுரை தந்துள்ளார்கள்.
இத்தொகுப்பிலிருந்து இரு கவிதைகள்
நிலவெனும் முஸ்லீம் பெண்
தன் முகத்தை
மறைக்க
அணியும் கருப்பு பர்தா
2.
கால் தடுக்கி
நான் விழுந்தேன்
எழுந்த போது ! கவிஞனானேன்
காரணம்,
தடுக்கியது தாவணியாயிற்றே!


கருத்துகள்
கருத்துரையிடுக