புதுக்கோட்டை எழுத்தாளர் -219
அருள்வாக்கி அப்துல் காதிர் ( பிறப்பு - 1866 ஆம் ஆண்டு கண்டி – போப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்). இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞர், சந்தத் திருப்புகழ்ப் பாடிய புலவர் என அடையாளம் காணப்பெற்றவர்.அருள்வாக்கி என்பது பதினாறு வயதில் யாழ்ப்பாணத்தில் புலவர்கள் மத்தியில் தனது செய்யுளாற்றலை வெளிப்படுத்தி 'அருள்வாக்கி' எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சியவர்களில் ஒருவர். பதங்கள், சிறப்புப் பாயிரங்கள், சாற்றுக்கவிகள், வாழ்த்துக்கவிகள், சரமகவிகள், சீட்டுக்கவிகள் என்று பாடியுள்ளார். இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி காலத்தவர். இருபத்து எட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.
இவர் இயற்றிய நூல்களில் ஒன்று "திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்மி".
காட்டுபாவா பள்ளிவாசல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் மிக முக்கியமான வழிபாட்டு தளம். பிராமணப் பெண்களைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றி உயிர்த்துறந்தார். ஒரு பெரியவர் கனவில் தோன்றி சொன்னதன் பேரில் நவாப் ஆட்சிக்காலத்தில் காட்டுபாவா உயிர் துறந்த இடத்தில் தர்கா எழுப்பப்பட்டு இன்று அனைத்து சமயத்தவர்களும் வழிபடும் தலமாகியுள்ளது.
இந்நூல், காட்டுபாவா சாகிப்பின் வீரம், அன்பு, காதல், பக்தி முதலான நவரசச் சுவைகளையும் அடக்கியதாக இக்காரணக் கும்மிப் பாடல்கள் அமைந்துள்ளன. நாகூர் ஆண்டகையெனப் போற்றப்படும் சாஹுல் ஹமீதொலி நாயகரின் பேரர் இவர். காட்டு பாவா சாகிபு அவர்களின் வீரத்தையும் தியாக வரலாற்றையும் அன்னார் நிகழ்த்திய அற்புதங்களையும் இக்கும்மிப் பாடல்களின் வழியே பாடுகின்றன.
இந்நூலின் முகப்பு இவ்வாறு கூறுகிறது. திருப்பத்தூர் ஆ.பி.அல்லாபிச்சை ராவுத்தரவர்கள் குமாரரும் அதே ஊர் வித்துவசிரோமணி மகுமூதுமுத்துப்பாவாப் புலவரவர்களின் மாணாக்கருமாகிய அருள்வாக்கி அப்துல் காதிறுப்புலவரவர்கள் இயற்றியது.
இந்நூல் கொழும்பு கும்பனித் தெருவில் புத்தகவியாபாரம் எம். எஸ். முகியித்தீன் சேராமுதலியார் அவர்கள் முயற்சியால் சென்னை வாணீவிலாச அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது. ஆண்டு – 1905.
இருபத்து நான்கு பக்கங்களில் அமைந்த இந்நூலில் 92 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்குச் சாத்துகவி பாடியிருப்பவர் சிவகங்கை இராஜசமஸ்தான வித்துவான் பொன்னுசாமி கவிராஜர். புகழ்க்கவி சீறாப்புராணீகர் மரபினராகிய மதுரை ஜில்லா கஸ்பா மேலூர் நா.க.உ. கல்விக்களஞ்சியப் புலவர், கீழ்க்கரை இயற்றமிழ் நாவலர் ம.வு.ம.செய்யிது முகம்மது அலியார், ஸ்ரீமான் காதிறுமுகியித்தீன் என்னும் எம்.எஸ்.முகியித்தீன் சேராமுதலியார் மற்றும் கீழக்கரை மகா –ரா-ரா-ஸ்ரீ ச.கா.முகம்மது ஸதக்குத்தம்பி ஆலிப்புலவரவர்கள்.
இந்நூல் கீழ்காணும் தலைப்புகளில் கும்மிப் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன.
மரபுவழி,
அவுலியாக்களின் ஸியாறத்துக்குப் புறப்படுதல்,
பாதை போந்தது,
திருமயத்தூரார் விருந்தளித்தது,
காட்டுவழி போகுதல்,
எழுபிராமணப் பெண்கள் வருதல்,
பிராமணப் பெண்களோடு வழிநடந்தது,
கானகத்தியல்பு,
கள்வர்கள் வருதல்,
கற்பாறை கண்டது,
கருங்கற்பாறையில் நீரழைத்தது,
கள்வர் வளைந்தது,
கள்வரோடுபோர் புரிந்தது,
பிராமணப் பெண்கள் மூர்ச்சையடைந்தது,
நாயகர் ஷஹீதானது,
கள்வர்பெண்களுக்கு அம்புதொடுத்தது,
பிராமணப்பெண்கள் பரிதாபித்தது,
கள்வர் கண்களைக் குருடாக்கி மீட்டியது, கள்வர் பெண்களுக்கு வழிகாண்பித்தது,
ஓர் பெரியோர் கனவு கண்டது,
நாயகரையடக்கஞ் செய்தது,
நாயகர் செய்த அற்புதங்கள்,
சென்னை நவாபு தறுகா என்னும் ஆலயங்கட்டியது,
மானிபம்விட்டது,
உற்சவ வினோதம்,
கொடைநாயகன்புகழ்ச்சி,
வாழி
இந்நூலின் கடவுள் வாழ்த்து கும்மி இவ்வாறு பாடப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து
தரு. இராகம் - நாதநாமக்கிரியை - தாளம் - ஆதி
குழிப்பு
தான தந்தனத் தானானா தன தானன தந்தனத் தன்னானா
தனதந்தன - தனதந்தன
தனதந்தன - தனதந்தன
தந்தனத் தான தனதனனா
கண்ணிகள்
சீர்தங்குங் காட்டுவாசாகிபு வாமெங்கள்
செய்யிது மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிந்தைத்தனி லெந்தத்தின
முந்தத்துவ விந்தைத்தரு
திவ்ய பராபரன் காப்பாமே. (தானன )
கற்பக மாகிய காட்முவா சாகிபெங்
கண்மணி மேற்கும்மிப் பாட்டுரைக்கக் -தான்ன
கஞ்சப்பத - நெஞ்சிற்றரு
மஞ்சொற்சுவை - ரஞ்சித்தொளிர்
ஹாமீம் முகம்மதுங் காப்பாமே (தானன )
தாரணி போற்றிய காட்டுபா வாவொலித்
தாபதர் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தானந்தவ- மோனங்கலை
ஞானந்திகழ் - மானம்புனை
தண்ணபூ பக்கர் பதம்புகழ்வாம் (தானன)
நாகை ஹமீதொலி நாயகர் கண்மணி
நாதர் செய்குயூசு பீன்றமணி
நலமுத்திரை - யதுபெற்றுயர்
பதவிக்குறு -மொலியைத்துதி
நாட்ட வுமறிரு தாட்டுணையே (தானன)
பாவலர் போற்றிய காட்டுவா சாகிபெம்
பாக்கியர் மேற்கும்மி பாடுதற்குப்
பாரந்தனி-லேருந்திய
வீரந்தனி-லாருங்கர
பண்புதுமானின் பதந்துணையே (தானன)
அட்டதிக்கும் புகழ் காட்டுவாசாகிபு
ஆண்டவர் மேற்கும்மிப் பாட்டுரைக்க
அடையார்தலை -பொடியாகவே
படிமீதினி - லிடியேறெனும்
ஆண்மை யலிப்புலி தாள்(ழ்)பணிவாம் (தானன)
மாதவ மோங்கிய காட்டுபா வாசாகிபு
மங்களர் மேற்கும்மி பாடுதற்கு
வையந்தனி - லுய்யும்புகழ்
செய்யுந்திரு - மெய்யன்பொலி
மன்னர் முகிய்யித்தீன் தாள்(ழ்)பணிவாம் (தானன)


கருத்துகள்
கருத்துரையிடுக