புதுக்கோட்டை எழுத்தாளர் -09
ப.உமாபதி, (பிறப்பு - 24.11.1939 பெற்றோர் - கயி. பழனியப்பன் - காசியம்மாள்) . கரம்பக்குடி தெற்குத் தெரு.
கரம்பக்குடியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முதுகலை தத்துவம், சமூக அறிவியல் முடித்து ஆசிரியராக பணியாற்றினார். பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று ஊரக வளர்ச்சித்துறையில் அதிகாரியாகவும் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பணிக்காலம் 36 ஆண்டுகள்.
தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதக்கூடியவர். திறனாய்வாளர், சொற்பொழிவாளர்.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டி நூல்களாக எழுதப்பெற்ற மூன்று நூல்களில் இடம் பெற்றிருந்தார்.
கரம்பக்குடி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆலோசகர், கரம்பக்குடி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் உட்பட பல அமைப்புகளில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
சமுதாயச் சிற்பி விருது, சிறந்த சமூக சேவை விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். சமீபத்தில் கரம்பக்குடி தமுஎகச கலை இரவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
இந்தப் பூமியில் நான் கழித்த பொழுதுகள், எனும் இவரது நூல் சிறந்த தன்வரலாறு பிரிவில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றது. இந்நூல், அவரது வாழ்க்கை வரலாற்றினூடே புதுக்கோட்டை ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மேற்கு அரண்மனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக மாற்றப்பட்ட கால நிகழ்வுகளைப் பேசுகிறது. இந்நூலில் புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னர்,
புதுக்கோட்டை மாவட்ட முதல் ஆட்சியர், பற்றிய பதிவுகள் உண்டு.
புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் பிறகு, மாவட்டத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட மேற்கு புதிய அரண்மனையை விலைக்கு கேட்டது மாநில அரசு. தொண்ணூற்று ஒன்பது ஏக்கர் உள்ளடங்கிய அந்த அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக கொடுத்தார் ராஜகோபால தொண்டைமான். இந்த அரண்மனைக்கு எதிரில் சற்று தள்ளி தெற்கில் ஒரு மாளிகை இருந்தது.
மன்னர் ராஜகோபால தொண்டைமான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் நிகழ்ந்து ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தை மன்னராக முடியாது, என்பதால் அவர் திருமணத்தை மறுத்திருந்தார். மேலும் புதுக்கோட்டைக்கு அவர் வந்துசெல்வதையும் தவிர்த்திருக்கிறார். முனிவரைப் போல வாழ்ந்த மன்னரை மக்கள் 'ராஜரிஷி' என அழைத்திருக்கிறார்கள், இத்தகையை வரலாற்று செய்திகள் கொண்ட நூல் இது.
இதுதவிர, திருவிழா காண வந்தேன், பெண்ணே நீ படைப்பின் மகுடம், மெய்யியல் ஆய்வுகள், இறை நம்பிக்கைக்கான மெய்யியல் அடிப்படை, இறைவன் எனக்களித்த இல்லவள் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.
தற்போது மெய்யியல் மற்றும் தத்துவங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பற்றிய விரிவான நேர்முகம் மேன்மை இதழ் 2018 பிப்ரவரி இதழில் வெளிவந்தது.
இத்தகைய சிறப்புகள் கொண்டவர் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். எழுத்தாளர் ப. உமாபதி அவர்களுக்கு வாழ்த்துகள்,,,,




கருத்துகள்
கருத்துரையிடுக