புதுக்கோட்டை எழுத்தாளர் - 214
ஆ.தமிழ்மணி ( ஆறுமுகம் வெள்ளமணி) 30.09.1977, ராஜாளிபட்டி, விராலிமலை. வழக்கறிஞர் பணி. 2005 முதல் எழுதிக்கொண்டிருக்கிறார். தினமணி, ஜனசக்தி, மந்திரச்சிமிழ், சங்கொலி, புதிய பார்வை ஆகிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.இவரது முதல் படைப்பு உறங்கும் மனசாட்சி. பல்வேறு இதழ்களில் பிரசுரமான 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உறங்கும் மனசாட்சியை உலுக்கும் நேரம் எனும் கட்டுரைத் தலைப்பைச் சுருக்கி இந்நூலுக்குப் பெயர்ச்சூட்டியுள்ளார். இக்கட்டுரைகள் யாவும் மனசாட்சியுடன் பேசும் கட்டுரைகள்.
மரண தண்டனை: தவிர்க்க முடியாதா? இத்தொகுப்பில் ஒரு கட்டுரை. தண்டனை என்பது மனிதனைச் சீர்த்திருத்தி நெறிப்படுத்தவா அல்லது பழிவாங்கவா? என்கிற கேள்வியை எழுப்பி பல்லுக்குப் பல்; கைக்குக் கை என்கிற போக்கு வழி தண்டனைகள் மனித குலத்திற்கு எதிரானது என்கிறது இக்கட்டுரை .
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மார்சல் தனது தீர்ப்பில் எழுதுகிறார். " எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான், தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன், தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது" இப்படிச் சொல்லியே நீதியரசர் மார்சல் அவர்கள் மரண தண்டனைக்கான சட்ட வழியை நீக்கம் செய்தார், என இக்கட்டுரை ஓரிடத்தில் பேசுகிறது.
"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதும் மனித உரிமைக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது " என்கிறார் கிருஷ்ணய்யர்.
ஒரு சமூகம் நாகரிகம் அடைந்திருக்கிறதா என்பதை அளந்து பார்க்கும் கருவிகளுள் அச்சமூகம் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத்துகிறது என்பதும் ஒன்று என்கிறார் நீதியரசர் பி.என்.பகவதி
இப்படியான பதிவுகளைக் கொண்ட இக்கட்டுரை புதிய பார்வை இதழில் பிரசுரமானது.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கே.ஜீவபாரதி அவர்கள், "ஓர் வழக்குரைஞரின் சமூகம் சார்ந்த வாதங்கள்!" எனும் தலைப்பில் ஜனசக்தி இதழ் செய்த இலக்கியப் பங்களிப்புகளைச் சொல்லி, நூலாசிரியரின் சமூகம் சார்ந்த வாதங்களை குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் வெளிவரும் பத்திரிகைகளில் ‘ஜனசக்தி'க்கு நீண்ட நெடிய வரலாறும் தனித்துவமும் உண்டு. பாவேந்தர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவிதை 'ஜனசக்தி'க்காக பாவேந்தர் எழுதி 'ஜனசக்தி'யில் வெளிவந்த கவிதையாகும். ஜனசக்தியில் வெளிவந்த 'நண்டு செய்த தொண்டு' என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைதான் அவருக்கு திரையுலக வாய்ப்பை வாங்கித் தந்தது. ஜனசக்தியில் அலுவலகச் சிறுவனாக நுழைந்து, பிழை திருத்துபவர். ஆசிரியர் குழுவில் ஒருவர் என வளர்ந்து பிற்காலத்தில் தமிழிலக்கியத்தில் தனித்த இடத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் த.ஜெயகாந்தன். இதுபோன்று 'ஜனசக்தி'யின் சாதனைகள் ஏராளம். இத்தகைய சாதனையாளர்களை உருவாக்கிய ஜனசக்தி இதழில் எழுதத் தொடங்கியவர் ஆ.தமிழ்மணி அவர்கள். தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மணப்பாறை மண் பலரைத் தந்திருக்கிறது. அந்த வரிசையில் வழக்கறிஞர் தமிழ்மணியும் இணைந்திருக்கிறார் என்பதற்கு இந்நூல் சான்றாகும்.
மந்திரச்சிமிழ் பதிப்பகம்
கிழக்குத் தாம்பரம்
சென்னை -73


கருத்துகள்
கருத்துரையிடுக