புதுக்கோட்டை எழுத்தாளர் -222
புலவர் துரை.மதிவாணன், இயற்பெயர் தனுக்கொடி. பிறப்பு - 14.12. 1930 பெற்றோர் - துரைச்சாமி , அம்மணி அம்மாள். புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா தொடையூரில் பிறந்தவர்.பள்ளிப் பருவத்தில் குடியின் கொடுமை, குணவதியின் கண்ணீர் ஆகிய நாடகங்களில் நடித்தவர்.
திமுக அமைப்பு தொடங்கிய கால முதற்கட்ட உறுப்பினர். குளத்தூர் வட்ட திமுக முதல் செயலாளர். டால்மியாபுரம் பெயரைக் கல்லக்குடி என மாற்றக் கோரிய போராட்டத்தில் கலைஞர் மு. கருணாநிதியுடன் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
திராவிட நாடு கொள்கையில் தீரா நம்பிக்கைக்கொண்டிருந்தார். இக்கோரிக்கைக்காக சிறை நிரப்பும் போராட்டத்தில் சிறை செல்ல முன்வந்தார். இக்கோரிக்கையைத் திமுக கைவிட்டதும் அந்த அமைப்பிலிருந்து விலகினார். 1964 இல் தமிழாசிரியராகப் பணியேற்று தமிழ்ப்பணியாற்றி வந்தார். 1987 ஆம் ஆண்டு பணி ஓய்வு. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் திருமதி பா.புவனேசுவரி அவர்கள் இவரது மாணவியர்.
திராவிடக் களஞ்சியம் எனச் சொல்லும் அளவிற்கு திராவிடப் பற்றும் ஆழந்த போராட்ட அனுபவமும் பெற்றவர். ஈழத்தமிழ் ஆதரவாளர். தமிழர்த் தேசியம் இவர் கொண்டிருக்கும் கொள்கைகளில் ஒன்று.
க. முத்துச்சாமி வல்லத்தரசு மீது இவருக்குப் பெரும் மதிப்பு உண்டு . 1981 ஆம் ஆண்டு வல்லத்தரசு விழா நடத்தி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் எனும் அமைப்பு துரை. மதிவாணன் முயற்சியின் பேரால் தொடங்கப்பட்டது. இவர் தொடங்கிய மற்றொரு அமைப்பு சிற்றூர் சீர்திருத்தக் கழகம்.
இவரது வாழ்வில் நடந்தேறிய ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுத்தாளர் சுப்ர.பாலன் வெளியேற்றம் எனும் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.
மறைமலை அடிகள் விருது, தமிழ்த்தேசியச் செம்மல் விருது, குறள்நெறிச் சான்றோர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். எழுகதிர் எனும் மாத இதழில்,"திராவிட இயக்க மூத்தத் தோழரின் அனுபவங்கள் " எனும் தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். விரைவில் இத்தொடர் நூலாக்கம் பெற இருக்கிறது.
இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி புதுக்கோட்டை ஆறாவது புத்தகக திருவிழா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த்துகிறது.




கருத்துகள்
கருத்துரையிடுக