புதுக்கோட்டை எழுத்தாளர் - 228
பண்டிட் ஆர். உலகநாதபிள்ளை, ( POET LAUREATE ) பல்கலைக் கழக வித்வான், புதுக்கோட்டை.
இவரது ஊர், பிறப்பு பற்றிய தகவல் தெரியவில்லை. புதுக்கோட்டை அன்றைய மகாராஜா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். இந்நூலுக்கு ராணியார் பள்ளியின் தமிழ் பண்டிட் ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அணிந்துரை தந்திருப்பதும் இந்நூலை புதுக்கோட்டை கமலா ப்ரஸ் அச்சிட்டு வெளியிட்டிருப்பதையும் கொண்டு பார்க்கையில் புதுக்கோட்டையுடன் நெருங்கி தொடர்பு கொண்டிருப்பது தெரிகிறது.
இந்த நூல் வெளியான ஆண்டு – 1936. வெளியீடு - கமலா ப்ரெஸ், புதுக்கோட்டை
இவர் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்
1. திருவாலவாய் துயரறு பதிகம்
2. புள்ளிருக்கும் வேளூர் நோயறு பதிகம்
3. திருப்புகலூர் மிடியறு பதிகம்
4. திருமறைக்காடு அறிவுறுபதிகம்
5. திருத்தில்லை வீடுறுபதிகம்
இந்து ஐந்து நூல்களின் தொகுப்பு நூல் ‘ஐங்குறு வேண்டுகோள்’
இந்நூலுக்கு நூலுக்கு நூலாசிரியர் இவ்வாறு முன்னுரை எழுதியுள்ளார்.
அடியேன் பல்வேறு வேலைகள் பார்த்துவந்த போழ்து,“ கற்றத்தாற் சுற்றப் பட வொழுகல் செல் வந்தான், பெற்றத்தால் பெற்ற பயன்” என முற்றுணர் புலவர் கட்டளையிட்டருளியவாறு யான் திக்கற்ற நான்கு குடும்பத்தார்களைப் பாதுகாத்து வந்தபடியாலும் முறைபிறழா நெறியின்கண் நின்றே பொருளைஈட்டி வந்தபடியாலும் எனது வருவாயுள் ஒரு சிறிதும் எஞ்சிற்றிலது. ஆதலின் எனக்கு உபகாரச் சம்பளம் ( பென்ஷன்) ஏற்பட்ட காலத்தில் செலவுக்கு மிக்க முட்டுப்பட்டுத் துயருற்று, மிடியுற்று, நோயுற்று வருந்துங்காலத்துச் செல்வச் செருக்குற்ற செல்வர்பாற் சென்று செய்யுள்யாத்து வயிறு வளர்த்தல் பழியும் பாவமுமென அஞ்சி, எல்லாம்வல்ல இறைவனைப் பாடின், இரு செல்வங்களும் ஒருங்கெய்தலாமென மனத்திடங்கொண்டு, இவ்வைந்து நூல்களையும் இயற்றி “ ஐங்குறு வேண்டுகோள்” எனப் பெயரிட்டனன். உடனே எனது நெடிய துயரும் கடியமிடியும், கொடிய நோயும் பொடி பொடியாயின. மெய்யுணர்வும் வீட்டின் விருப்பும் என்மாட்டு நாணாளும் மிக்கெழுகின்றன.
ஆனதுபற்றி, இந்நூலைக் கடவுளிடத்தன்புபூண்டு மனத்தூய்மையுடன் ஓதுபவர்கள் மேற்குறித்த பயன்கள் யாவும் ஒருங்கெய்துதல் ஒருதலையென்னும் திண்ணிய வெண்ணத்தாலும் “ யான்பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம்” என ஆன்றோர் பொன்மொழி என் புன்மனத்து எழுந்தாலும் இதனை வெளிடுவான் எண்ணினேன்.
அன்னோர் பால் யானும் இத்தமிழுலகும் என்றும் நன்றி பாராட்டக் கடப்பாடுடையோமாகுன.
இங்ஙனம்
பண்டிட் ஆர். உலகநாதன்.
இந்நூலுக்கு நிதி உதவி செய்தவர் மாயவரம் இருப்புப்பாதை சதுக்கத்தில் கப்பற்றுரைமுகச் சாமான்களேற்றும் கணக்கர் ( Tranship Clerk ) டி.எம். நடேசபிள்ளையவர்கள்.
இந்நூலுக்கு அணிந்துரை ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழ்ப்பண்டிட், ராணியார் இலவச பெண்கள் மேனிலைப் பள்ளி, புதுக்கோட்டை. ( R. Meenaksisundram Pillai, Tamil Pandit, Ranee`s Free High School , Pudukkottai.
நேரிசை வெண்பா
பைங்குருகு பாடுங்காப் பண்பார் புதுவையுளான்க்
ஐங்குறு வேண்டுகோ ளன்பாக – நன்குருகும்
நன்மன த்தோ டோதினர்க ணாற்பயனெய் தச்சொன்னான்
தன்ம னுலகநா தன்.
ஐந்து சிவ தலப்பாடல்களில் திருமறைக்காடு அறிவுறுபதிகத்திற்கு செய்யுளுடன் உள்ளுரை விளக்கம் தந்துள்ளார். ஐந்தில் திருவாலவாய் தலத்தில் தனது துயரைப் போக்கவும், புள்ளிருக்கும் வேளூர் தலத்தில் நோய் போக்கவும், திருப்புகலூர் தலத்தில் மிடிமைத் ( வறுமை) தணிக்கவும் திருமறைக் காட்டில் அறிவு கொடுக்கவும், திருத்தில்லை தலத்தில் வீடு அடையவும் பாடியுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக