புதுக்கோட்டை எழுத்தாளர் - 229
கவிஞர் சா. சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை மேலாளராகப் (ஊராட்சி வளர்ச்சி) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊர் - பொன்னமராவதி .இவர் இயற்றிய நூல் - குமரமலை தலவரலாறு – பாமாலை. இந்நூலைத் தெய்வீகப் பேரவை எனும் அமைப்பு வெளியிட்டது. இந்த பேரவை அரசு அலுவலர்கள் அமைப்பு. நூல் ஒரே வருடத்தில் இரண்டு பதிப்புகள் கண்டிருக்கின்றன. முதற்பதிப்பு – 01.01.1984, இரண்டாம் பதிப்பு – 15.05.1984.
அச்சிட்டோர் – மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை.
குமரமலை, திருப்புல் வயலில் வாழ்ந்த குருபாததாசரால் இயற்றப்பட்ட குமரேச சதகம் என்ற பாடல் பெற்ற சிறப்புடைய திருத்தலம். இத்தலத்தின் அருமை பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏற்றதொரு நூல் உடனடித் தேவை என்பதை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் திரு. எஸ்.டி.காசிராஜன் இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நூலை தான் இயற்றியதாக இந்நூலின் ஆசிரியர் சா.சீனிவாசன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் வெளிவருகையில் எஸ்.டி.காசிராஜன் சென்னை போக்குவரத்து ஆணையராகப் பதவி உயர்வு பெற்று விடைபெற்றார். இவரை அடுத்து ஆட்சியராக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர் திரு. இரா.கற்பூரசுந்தர பாண்டியன் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய உரை இரண்டாம் பதிப்பில் பின்னிணைப்பாக இடம் பெற்றுள்ளது.
இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் எஸ்.டி.காசிராஜன் இ.ஆ.ப அவர்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பக்திச் சுவைசொட்டும் பனுவல்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. கற்போர் நெஞ்சை அள்ளும் திறத்துடன் செந்தமிழ் மணக்கும் தீந்தமிழ் பாக்களாய் அமைந்துவிட்டன. பக்தித் துறையில் உலகின் ஒப்புயர்வற்ற இலக்கியப் பெட்டகங்களைப் படைத்த மொழி தமிழ், பழமையிற் பழமையும் புதுமையிற் புதுமையும் மாறா இளமையும் கடவுட்பண்பாக மனித இனம் கருதி வந்துள்ளது.
குறுந்தொகையில் முருகன் புகழை உவமைகளால் அழகுறவர்ணிப்பதைப்போல இந்நூலாசிரியர் பாமாலையில் உவமை நயம் செறிந்துள்ளது. திரு. சா. சீனிவாசன் அவர்களின் அரிய படைப்பான இப்பாமாலையைப் போற்றி அணிந்துரை நல்கும் வாய்ப்புப் பெற்றமை குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன், என்று எழுதியுள்ளார்.
நூலின் ஆசிரியர் சா.சீனிவாசன் அவர்கள் தனது என்னுரையில், 12.03.1965 இல் நான் பொன்னமராவதியில் பணியாற்றிய போது அதன் அருகே தேனீ மலையில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு சண்முகநாதன் “ தேனீமலைப் பாமாலையை” என்னைக் கொண்டு வெளியிடச் செய்து அருள்பாலித்தார். இப்பாமாலையைக் கரூரில் வாழ்ந்த மனிதமறைப் புலவர் ஏறு கருவை முத்துரெத்தினபாரதி என்ற பெரும்புலவரைக் கொண்டு எழுதச் செய்து அதை எழுதக் காரணமாகவும், அதை வெளியிடும் பொறுப்பையும் எனக்களித்து அன்று சண்முகநாதன் ஆட்கொண்டார். இப்போது குமரமலை குமரேசன் பாமாலையை என்னை எழுதச் செய்து அதை வெளியிடும் வாய்ப்பையும் வழங்கினார், என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் எழுதுவதற்கு உதவியதாக குமரேசப் பெருமாள் மீது பெரிதும் ஈடுபாடு கொண்ட ‘ குமரமலைப் பஞ்சரத்னம்’ என்ற பாமாலையை இயற்றி குமரனுக்கு சூட்டி மகிழ்ந்துள்ள திருக்கோகர்ணம் சோதிட வித்துவான் திரு.வை. சுப்பிரமணிய பாரதி அவர்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார்.
அருள்மிகு குமரமலை தண்டபாணி குமரேசன் பாமாலை எனும் இந்நூல் அறுபது பாடல்களைக் கொண்டது. இத்துடன் கந்தபுராணம், படை விட்டோன் பதம் போற்றி மற்றும் இந்நூலுக்குப் பலரும் எழுதியுள்ள மதிப்புரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மதிப்புரையில் தினமணி நாளிதழ் ( 13.02.1984), எஸ்.டி. காசிராஜன் இ.ஆ.ப, இரா. கற்பூர சுந்தர பாண்டியன் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை, கி.வா.ஜகந்நாதன், கிருபானந்தவாரி, திரு.கு.ஆளுடைய பிள்ளை இ.ஆ.ப ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சாயிமாதா. சிவ. பிருந்தாதேவி, சுவாமி சாச்தானந்தர் ஆகியோர் மதிப்புரை தந்துள்ளார்கள்.
இந்நூலின் விநாயகர் காப்பு இவ்வாறு பாடப்பட்டுள்ளது
குமர மலைவாழ் குமரன் நினைவைச்
சுமந்த உளம்மகிழத் தோன்றும்- குமரேசன்
பாமாலை சாற்றிப் பணிந்தேன்வி நாயகநின்
காக்கும் கவின்மலர்தாள் காப்பு
குமரமலை பாமாலையின் முதல் பாடல் இது.
பழகுதற்கு தமிழ்தந்தாய் பாடுதற்கு பொருள்தந்தாய்
அழகுமயில் மீதமர்ந்து அருளைத் தந்தாய்
குழலழகு தெய்வ யானை யுடன்கூடி மகிழ்ந்திருந்து
குறவள்ளிக் கொடியவள் குரலிலும் எனை நினைந்தாய்
அழகுதமிழ் எடுத்து அருளையும் அதில் குழைத்து
உலகுய்யப் பாமாலை உவந்து நான்சூடுதற்கு
அழகுமலை குமரமலை அமர்ந்த குமரேசா
அருளை நீ குவிப்பாய்! ஆசியெனக் களிப்பாய்!


கருத்துகள்
கருத்துரையிடுக