புதுக்கோட்டை எழுத்தாளர் – 230
தவத்திரு. தயானந்த சந்திரசேகரன், திலகவதியார் திருவருள் ஆதினம். திலகவதியார் திருவருள் ஆதீனச் செய்திமடல், எனும் பத்திரிகையின் ஆசிரியர். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! என்கிற வாசகத்துடன் வெளிவந்த இதழ் இது.
இவர் முதல் பெண் ஆதீனமாக திகழ்ந்த திலகவதியார் திருவருள் ஆதீனம் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் வளர்ப்பு பிள்ளையாவார். தனது அக்கா பேரனான இவர், அன்னையிடத்தில் நான்கு வயதிலிருந்து வளர்ந்து வந்தவர். இளம் நிர்வாகவியல்,கணினி முதுகலை பட்டம் பெற்றவர்.
1998 ஆம் ஆண்டு அன்னையார் இறைவனது நிழலடி அடைந்த பிறகு திலகவதியார் திருவருள் ஆதீனம் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வருகிறார். அன்னையின் பெயரால் நினைவு பொது நூலகம் நடத்தி வரும் இவர் ஆண்டுதோறும் முதல் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள் விழாவில் ஏழைப் பெண்களுக்கு உதவி செய்துவருகிறார்.
இவர் எழுதிய நூல்கள்
மாதர்குல மாணிக்கம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார்.
சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள்
திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள்
ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும் சமுதாய வாழ்வும்
இவர் பதிப்பாசிரியராக இருந்து அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி நிறுவிய திலகவதியார் திருவருள் ஆதீனம் வெளியீடாக கொண்டுவந்திருக்கும் நூல், “பத்மபூஷன் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் மாதர்குல மாணிக்கம்” இந்நூல் டாக்டர் முத்துலெட்சுமியின் வாழ்க்கை வரலாறு.
இந்நூலுக்கு பதிப்புரையும் நன்றியுரையும் இவ்வாறு எழுதியுள்ளார்.
பெண்களறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்
என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகள் எவ்வளவு உண்மை என்பதை அனுபவமாக உணர்ந்த பிறகுதான் தெரிகிறது. ஆம்! பெண்கள் இன்று வளர்ந்துள்ள நிலையினை கொண்டே நாம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைகளாகவும் போதைப் பொருளாகவும் வைத்து வந்துள்ளதை வரலாறுகள் பறைசாற்றுகின்றன.. பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று நாம் படித்தாலும் ஆணுக்கு ஓர் நீதி பெண்ணுக்கு ஓர் நீதி என்ற நிலை.
பெண்ணினத்தைப் போற்ற வேண்டும், அதனை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அடித்தளமிட்டு முழக்கமிட்டவர்கள் மகாகவி பாரதியார், தந்தை பெரியார் போன்றவர்கள். இந்த நிலையில் சில அரிதான பெண்கள் அவதாரம் எடுக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முன்மாதிரியான பெண்மணி ஆவார்.
இந்நூல் முத்துலெட்சுமியின் வாழ்க்கை வரலாறு. முத்துலெட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் நாராயணசாமி, தாயார் – சந்திராம்மாள். மூன்று பெண் குழந்தைகளில் முதல் பெண் முத்துலெட்சுமி. இவரது ஆசிரியர் திரு பாலையா என்பவரின் விடா முயற்சியின் பேரால் பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்வதற்கு மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது. முத்துலெட்சுமியின் தந்தையார் கல்லூரியின் டைரக்டர் என்பதால் அக்கல்லூரியில் படிக்க மன்னர் இசைவு தெரிவித்தார். கல்லூரி இன்டர்மீடியேட் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சிப் பெற்றார். பிறகு 1907 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியராகச் சேர்ந்தார். அப்போது மருத்துவப் படிப்பு M.B C.M என்று அழைக்கப்பட்டது.
இப்படியான பல தகவல்கள் கொண்ட இந்நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒரு செய்தி, இந்திய மாதர் சங்கம் டாக்டர் முத்துலெட்சுமியின் பெயரைச் சட்ட மேலவை உறுப்பினராக முன்மொழிய, அப்பதவிக்கு அவர் தேர்வாகிறார். பிறகு சட்ட மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்தக் காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு ஏரவடா சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் தனது சட்டமேலவைப் பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார். அந்தப் பதவி விலகல் கடிதம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
இந்நூல் வெளியீடு –
தவத்திரு. தயானந்த சந்திரசேகரன்,
திலகவதியார் திருவருள் ஆதீனம்
1120, மச்சுவாடி, புதுக்கோட்டை.
குறிப்பு – டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய நூல்கள், இலக்கிய, மருத்துவ, அரசியல் பங்களிப்பு குறித்தும் அவரது சுயசரிதை குறித்தும் தனிப் பதிவாக எழுதியுள்ளேன்.


.jpeg)


.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக