முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையை முதலில் ஆவணப் படுத்தியவர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -231

வில்லியம் ப்ளாக்பர்ன்

புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலாற்றை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?  புதுக்கோட்டை வரலாற்றில்  ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்  இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன், மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன். முன்னவர் தஞ்சாவூரில்  ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். புதுக்கோட்டைக்கு ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட முதல் ஆங்கிலேய அதிகாரி இவர். புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இவரது காலம் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809. பிறகு மார்ச்5, 1810 முதல் மார்ச் 3, 1823. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் புட்லர் பொறுப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார்.




ஜான் ப்ளாக்பர்ன் எனும் அரசியல் பிரதிநிதி.

ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர். ஆங்கிலேய அரசால் புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்ட பொலிட்டிக்கல் ஏஜெண்ட். டிசம்பர் 22, 1841 அன்று இப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். 1807 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரெசிடென்சி பதவி 1841 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்பதவி பொலிட்டிக்கல் ஏஜெண்ட் என மாற்றப்பட்டது. முதல் பொலிட்டிக்கல் ஏஜெண்ட் ஜான் ப்ளாக்பர்ன்.

சர். வில்லியம் ப்ளார்க்பர்ன் கெடுபிடியான ஆங்கிலேய அதிகாரி என்றால் ஜான் ப்ளாக்பர்ன் தொண்டைமான் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருந்தவர். இவரை மன்னர் குடும்பத்தார்கள் 'அங்கிள்' என்று உறவு முறையால் அழைத்து வந்தார்கள். இவர் இப்பதவிக்கு வருவதற்கும் முன்பு தொழில் முனைப்பில் பங்குதாரராக இருந்தார். 

கரம்பக்குடியில் இண்டிகோ எனும் சாயப்பட்டறை மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் தொடங்கப்பட்டன. இப்பட்டறையின் பங்குதாரராக ஜான் ப்ளாக்பர்ன் இருந்தார். இந்தப் பட்டறையின் சரிபாதி பங்கு மன்னர் குடும்பத்திற்குரியது. இந்தச் சாயம் திண்மமாக்கப்பட்டு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகின.

 1807 ஆம் ஆண்டு மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் இறந்துவிடுகிறார். பிப்ரவரி1, 1807 அன்று விஜய ரகுநாத ராய தொண்டைமான் அடுத்த மன்னரானார். இவர் மன்னராகத் தேர்வு செய்யப்பட வில்லியம் ப்ளாக்பர்ன் பங்கு பெரியது.

இவரது நிர்வாகக் காலத்தில்தான் புதுக்கோட்டையின் ஆட்சி, நிர்வாகம், மக்கள், மண், நீர்நிலை, வனம், மரங்கள், நிலப்பரப்பு, வணிகம், வேளாண்மை குறித்த புள்ளி விபரங்கள் ஆவணமாகத் திரட்டப்பட்டன. புதுக்கோட்டை ஆவணப் பதிவுக்கு வித்திட்டவர் இவரே. இவர் திரட்டிய புள்ளி விபரங்கள் பனை ஓலையில் பதியப்பட்டன.

புதுக்கோட்டை பெருங்காடுகள் சூழ்ந்த நாடாக இருந்தது. வில்லியம் ப்ளாக்பர்ன்  குறிப்பின் படி,  மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு பெருங்காடுகள். முக்கியமாக ஆறு பெருங்காடுகள் இருந்துள்ளன.

1.   டவுன் பாரஸ்ட்  ( பெரியவளைக்காடு – மேற்கு, சிறிய வளைக்காடு – வடக்கு)

2.   செங்கரைக்காடு

3.   புலிவயல், வயலோகம், பரம்புக்காடு

4.   நார்த்தாமலைக்காடு

5.   திருவரங்குளம் காடு

6.   வாராப்பூர் மற்றும் சக்கிலியன்கோட்டை காடு

இத்துடன் வனம், மண், நில அமைப்பு, மரங்களின் வகைகள் போன்ற தகவல்களையும் ஆவணப்படுத்தினார். இந்த ஆவணம் பிரிட்டிஷ் ஆட்சியின் உத்தரவின் பேரால் நடைபெற்றது.

வில்லியம் ப்ளாக்பர்ன்

மெட்ராஸ் மாகாணத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பத்து மாவட்டங்கள் இருந்தன. அவை நீலகிரி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ,( மதுரா), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர்.

சேலம் மாவட்டத்தை ஆட்சிச் செய்த அலெக்ஸாண்டர் ரீ முதலில் மாவட்ட நிலம், மண், மக்கள் குறித்த புள்ளி விபரங்களை முதலில் ஆவணப்படுத்தினார். இப்பதிவைத் தொடர்ந்து தென்னிந்திய ஆட்சிப் பகுதிகள் முழுவதும் ஆவணமாக்கல் பரவலாக்கப்பட்டது. இதன் கீழ்தான் வில்லியம் ப்ளாக்பர்ன் புதுக்கோட்டை விவரங்களைத் திரட்டினார். இவரது ஆட்சி நிர்வாக தலைமையிலான அதிகாரிகள் கிராமந்தோறும் கள ஆய்வுப்பணியில் இறங்கி புள்ளி விபரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தினார்கள்.

ஸ்ரீமுக வருடம் புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்த ஒரு குறிப்பேடு, STATSTICAL ACCOUNT OF PUDUKKOTTAI என்கிற பெயரில் பெரும் ஆவணமாக உருவானது. பனை ஓலையில் எழுதப்பட்ட இந்த ஆவணம் 1885 ஏடுகளைக் கொண்டது. இதுவே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முதல் ஆவணமாகும்.

இந்த ஆவணம் 2011 ஆம் ஆண்டு ஓலைச் சுவடியிலிருந்து அச்செடுத்து நூல் பிரதியாக அச்சிடப்பட்டது. புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்து பதவி உயர்வு மூலம் தமிழ்நாடு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் ஜெ. ராஜாமுகமது மற்றும் அன்றைய புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் திரு. செ.கோவிந்தராஜ் இருவரும் 1885 ஏடுகளையும் குறிப்பெடுத்து நூலாக்கம் செய்தார்கள். அப்பொழுது தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை ஆணையராக இருந்தவர் திரு. ஸ்ரீ.ஸ்ரீதர் இ.ஆ.ப அவர்கள்.

1813- இல் புதுக்கோட்டை ஓலைச்சுவடி புள்ளி விபரக் கணக்கு Statstical Account Of Pudukkottai In  1813 Palm Leaf Gazetteer என்பது இந்நூலின் பெயராகும். இந்நூலின் மொத்த பக்கங்கள் -  ( 698 + 14 = 712 )

இந்நூலில் சிகந்நாதப் பிள்ளை என்கிற பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் குறித்து குறிப்பிடுகையில் “ சிகந்நாதப் பிள்ளைக்கு கொடுத்த கணக்குக்கு சரியான கணக்கு நகல்” என்று எழுதப்பட்டுள்ளதைக் குறிபிட்டு முன்னுரை எழுதப்பட்டுள்ளது.  சிகந்நாத பிள்ளை அப்போதைய தொண்டைமான் ஆட்சியில் ஒரு முகவராக இருந்திருக்கலாம்.

இந்நூல் 13 சங்கதிகள் ( செய்திகள் ) அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கதி 1 – தாலுகாவின் அமைவிடம், எல்லைகள், பரப்பளவு

சங்கதி 2 – தாலுகாவின் உட்பிரிவுகள்

சங்கதி 3 – கோட்டைகள், பட்டணங்கள், ஊர்ப் பெயர்கள்

சங்கதி 4 – ஆறுகள், கால்வாய்கள்

சங்கதி 5 – கண்மாய்கள்

சங்கதி 6 – ஊத்துகள், ஊரணிகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்

சங்கதி 7 – மலைகள், கரடுகள்

சங்கதி 8 – கோவில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், வீடுகள், நெசவுத்தறிகள்

சங்கதி 9 – காடுகள், தோப்புகள், மரவகைகள்

சங்கதி 10 – பாதைகள், பெருவழிகள்

சங்கதி 11 – கனிம வளம்

சங்கதி 12 – விளை நிலங்களுக்கு வகை, தரம், விளை பொருட்கள்

சங்கதி 13 – வாணிபம், ஏற்றுமதி

இந்நூல் குறிப்பிடும் முக்கிய அம்சங்களாவன, புதுக்கோட்டை சமஸ்தானம் புதுக்கோட்டை சீமை என அழைக்கப்பட்டது. சீமை ஐந்து தாலுகாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. வடமுகம், தென்முகம், கீழ்முகம், மேல்முகம், கீழாநிலை என்பன அவை. தாலுகாவானது மாகாணம், கதப்பா கிராமம் என உட்பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. இன்று வடமுகம் என்பது குளத்தூர். மேல்முகம் என்பது பெருமாநாடு, கீழ்முகம் என்பது ஆலங்குடி, தென்முகம் என்பது புதுக்கோட்டையாக விளங்குகிறது.

வடமுகம் 13 மாகாணங்கள் 705 கிராமங்கள்; தென்முகம் 19 மாகாணங்கள், 459 கிராமங்கள்; கீழ்முகம் 20 மாகாணங்கள், 575 கிராமங்கள்; மேல்முகம் 14 மாகாணங்கள், 712 கிராமங்கள்; கீழாநிலை 9 மாகாணங்கள், 176 கிராமங்கள் என கொண்டவை.

மண் வகைகளில் கரம்பை, செவ்வல், பொட்டல், கரிசல், வெப்பல், மணல் என்கிற வகைபாடுகளைக் கொண்டுள்ளது. இதன்படி கரம்பை முதல் தளம். இம்மண்ணின் பெயரால் கரம்பைக்குடி – கரம்பக்குடி அழைக்கப்படுகிறது. இரண்டாம் தரம் செவ்வல்.

 நிலங்கள் அச்சளிவு, அனாதித்தரிசு, கல்லிடம், புஞ்சை, அச்சிக்கட்டுத் தரிசு, நத்தம் எனும் பெயராலும்  வேலி, மா, குழி எனும் அளவாலும்  குறிக்கப்பட்டன. மேலும் சமஸ்தானத்திலுள்ள மரங்கள், கால்வாய்கள், ஆறுகள், குளங்கள், தெப்பக்குளங்கள், தீர்த்தங்கள், மலைகள், குன்றுகள், கரடுகள், பாறைகள்  இத்துடன் கோயில், கோபுரம், மண்டபம், சத்திரம், அரண்மனை, ஓட்டுவீடு, கூரைவீடு, நெசவுத்தறிகளின் எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த ஓலைச்சுவடியில் வருடம் இடம்பெறவில்லை. ஸ்ரீமுக வருஷம் அற்பசி மாதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முக வருஷம் கணக்கீட்டின் படி ஆண்டு 1813 என அந்நூல் குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டை வரலாறு பத்து வரலாற்று அறிஞர்களுக்கும் மேல் எழுதப்பட்டுள்ளது. ஆயினும் புதுக்கோட்டை வரலாறு ஆவணப் பதிவுக்கு வித்திட்டவராக சர். வில்லியம் ப்ளாக்பர்ன் திகழ்கிறார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...