புதுக்கோட்டை எழுத்தாளர்- 40
செம்பை மணவாளன், ( பிறப்பு - 1603.1945; பெற்றோர் - ஆசி.கோவிந்தசாமி - மாரியாயி). இவரது இயற்பெயர் பிச்சைமுத்து. பிறப்பு - செம்பாட்டூர். மச்சுவாடியில் வசித்து வருகிறார். கர்மவீரர் காமராசர் ஆட்சிக்காலத்தில் இரவு பள்ளிக்கூடத்தில் படித்தவர். கட்டுமானக் கலைஞர். தியாகி ஜீவா, பாலன், தோழர் நல்லக்கண்ணு, எழுத்தாளர் பொன்னீலன்,..இவர்களுடன் நெருங்கிய தோழமை கொண்டவர்.
சிறுகதை, கவிதை, இசைப்பாடல்கள் என பல தளங்களில் இயங்கக்கூடியவர். இந்திய நதிநீர் பிரச்சனைப் பற்றி ஊர் ஊராக நிகழ்ச்சிகள் நடத்தி மக்களைத் தூண்டியவர். கோபுரம் கட்டும் கலை நிபுணர். இவரது தாத்தா சமஸ்தான புதுக்கோட்டையில் வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.
பொதுவுடைமை போராளி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளராக பன்னிரெண்டு ஆண்டுகள் செயலாற்றியவர். தற்போது அப்பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர். கவிஞர், பாடகர், சிறுகதையாளர் எனப் பன்முகத்தவர்.
தினமணி மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசுகள் பெற்றவர். கோவை லில்லி தெய்வ சிகாமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசு பெற்றது.
பொது சேவையில் நாட்டம் கொண்டவர். இவரது பொதுச்சேவையைப் பாராட்டி மேனாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இருமுறை கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.
தவம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. மேலும் தவம் என்கிற சிறுகதை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடமாக இடம்பெற்றது.
இவரது பாத்திரப் படைப்புகளில் உப்புக்காரச்செட்டியார் பிரசித்திபெற்ற கதாபாத்திரம். மகளுக்கு சடங்குச் சுற்ற உறவினர்கள் வீட்டுக்கு வரவிருக்க, இவர் உப்பு விற்க வண்டியைப் பூட்டிக்கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பிவிடுகிறார். வீடு திரும்புகையில் ஒரு கிணற்றடியில் குளிக்கலாமென வேட்டியை அவிழ்த்து, குளித்து கரை ஏறுகையில் ஓர் எருமை வேட்டியைத் தின்றுவிடுகிறது. அதன்பிறகு எப்பொழுது இருட்டுமென கிணற்றடியில் நிர்வாணமாக மறைந்திருக்கிறார். எல்லோரும் ஒளிக்காகத் தவமிருப்பர். நமது செட்டியாரோ இருளுக்காகத் தவமிருந்தார்" என்பதாக அக்கதையை முடித்திருப்பார்.
புதுக்கோட்டையின் செம்மண் மொழியில் விவசாயக் குடிகளின் நசிந்த வாழ்க்கையை மனதை உருக்கும் சித்திரங்களாகக் காட்சிப்படுத்துவது செம்பை மணவாளனின் தனித்தன்மையாகும். " கரண்டியையும் பிடித்துக்கொண்டு பேனாப் பிடிப்பவன் உலகில் நீ ஒருவன் தானப்பா " எனக் கலைமாமணி தலைமை ஸ்தபதி திரு. எம்.எஸ். சிவப்பிரகாசம் பாராட்டியதை தனது வாழ்நாள் பெருமையாகக் கருதி வருகிறார்.
தனிப்பாடல்களுக்குப் பெயர்ப்போனவர். பல பாடல்கள் இயற்றி மெட்டமைத்து பாடியிருக்கிறார். ஈழம் போராட்டத்தின் போது இவர் எழுதிய பாடிய பாடல் இந்தியத் தமிழர்களை எழுச்சியூட்டிது.
அப்பாடல் இது.
இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே (2)
இலங்கையின் மண்ணினைப் பொன்னாக்கித் தந்ததும் எந்தயர் திருக்கரங்கள்
அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் செழிப்புற வளர்த்ததும் எங்கள்
மங்கையர் வளைக்கரங்கள் ( இலங்கை)
கற்பின் கனலிகள் செல்வக் குழந்தைகள் கதறலும் கேட்கலையோ- எங்கள்
காளையர் இரத்தமும் கடலினில் பாய்வதைக் கண்கொண்டு பார்க்கலையோ ( இலங்கை)
நித்தம் நித்தம் அங்கு செத்து மடிகிறார் எங்களின் மீனவர்கள்
எங்கள் புத்தனின் போர்வையில் இரத்தம் குடித்திடும் பொல்லாத வல்லூறுகள்
(இலங்கை)
ஒன்று இரண்டல்ல இருபத்து ஐந்து வருடம் ஓடி மறைந்தது காண்
இனி உங்கள் விழிநீரைத் துடைத்திடும் நாள்வரை ஓய்ந்திடோம் நாங்களும்தான்
தலைச் சாய்ந்திடோம் நாங்களும்தான்!
(இலங்கை)
இப்பாடல் 2003 ஆம் ஆண்டு தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் பாடப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் என்சிபிஎச் இணைந்து வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார். பல்வேறு சாதனை விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர் புதுக்கோட்டை ஆறாவது புத்தகக் கண்காட்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.


கருத்துகள்
கருத்துரையிடுக