புதுக்கோட்டை எழுத்தாளர் -223
கரு.ராசேந்திரன், ( 03.03. 1940 ) பெற்றோர் - கருப்பையா – எழும்பாயி. மேலப்பனையூர். திருமயம் தாலுகா, புதுக்கோட்டை. பத்தாம் வகுப்பு முடித்து, தொலைதூரக் கல்வி மூலமாக வரலாறு முதுகலை முடித்துள்ளார். எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர். தொல்லியல் ஆர்வலர்.
ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.
1.
புதுக்கோட்டை
வட்டாரக் கல்வெட்டுகள் –
2.
புதுக்கோட்டை
மறவர் செப்பேடு
3. வாசிக்க
வேண்டிய வரலாறு (ஆய்வுக் கட்டுரைகள்).
4.
புதுக்கோட்டை
மாவட்ட கல்வெட்டுகள்
5.
பனையூர்
சிவன் கோவிலின் வனப்பும் வரலாறும்
இது தவிர ஆய்வு கட்டுரைகள் தொண்ணூற்று ஐந்து எழுதியுள்ளார்.
அவரிடம் அலைபேசி வழியே 03.08.2023 அன்று நான் கண்ட
நேர்முகம் இது.
கேள்வி – “ ஐயா வணக்கம், உங்களுக்கு இந்த கல்வெட்டுத் துறை
மீது எப்படி ஆர்வம் வந்தது?”
பதில் – “எங்கள் ஊரில் ஒரு பழைமையான சிவன் கோவில் உள்ளது.
பல நூற்றாண்டுக்கும் முந்தைய கோவில் அது. அக்கோவிலில் நிறைய கல்வெட்டுகள் இருந்தன.
பள்ளிக்கூடத்தில் படிக்கையில் அந்தக் கல்வெட்டுகளை எழுத்துக்கூட்டி வாசிப்பேன். பிறகு
எங்கெல்லாம் கல்வெட்டுகள் இருக்கிறதென தேடி வாசிக்கத் தொடங்கினேன்.புதுக்கோட்டை மியூசியம் சென்று, அங்குள்ள புதுக்கோட்டை கல்வெட்டு ஆவணம் நூல் வாங்கி,
நான் கண்டுபிடித்த கல்வெட்டுகள் பற்றிய குறிப்பு இருக்கிறதா எனப் பார்த்தேன். சில கல்வெட்டுகள்
அதில் பதிவாகியிருந்தன. சில புதிதாக இருந்தன.
கேள்வி – உங்களுக்குளிருந்த இந்த ஆர்வத்தை எப்படி வெளி உலகத்திற்கு
கொண்டுவந்தீர்கள்?
பதில் – நான் கண்டுபிடித்த கல்வெட்டுகளைத் தமிழ்நாடு தொல்லியல்
துறைக்குத் தகவல் தெரிவித்தேன். அவர்கள் கல்வெட்டு இருக்கிற இடத்தைத் தேடி வந்தார்கள்.
அவர்களுடன் சேர்ந்து பயணித்தேன். அவர்கள் கல்வெட்டுகளை எப்படியாக வாசிக்கிறார்கள் என்று
பார்த்தேன். முனைவர் ஒய். சுப்பராயலு என்கிற
பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டுத் துறையில் பணியாற்றினார். அவர்
கல்வெட்டுகளை முறையாக வாசிக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். அவர் மூலமாக தமிழ்நாடு
தொல்லியல் துறை அதிகாரி முனைவர் ராசகோபால் உடனான நெருக்கம் கிடைத்தது. அவர், நீங்கள்
கண்டுபிடிக்கும் கல்வெட்டுகளை நீங்களே பதிவு செய்து நூலாக வெளியிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு நானே பதிவு செய்து நூலாக வெளியிட்டேன். இவர்களுடன் மதுரை முனைவர் வேதாச்சலம்,
தொல்லியல் துறை அதிகாரியையும் நான் நினைவுகூர வேண்டும். இவர்களின் தூண்டுதலால் இது
வரை எண்ணூறு முதல் தொள்ளாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடித்துள்ளேன்.
கேள்வி – நீங்கள் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் பெருமைக்குரியதாக
எதைக் கருதுகிறீர்கள்?.
பதில் - பாசனக் கல்வெட்டுகள். பாசனக் கல்வெட்டுகள் மீது
இதற்கும் முன்பு வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. நான் அதைக் கண்டுபிடித்து வெளி உலகத்திற்குக்
கொண்டு வந்தேன். அறுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடித்தேன். எல்லாம் ஆறாம்,
ஏழாம், எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டுகள்.
கேள்வி – ஓலைச்சுவடி, கல்வெட்டுகள், செப்புப்பட்டயம் மூன்றுக்கான
வித்தியாசம் என்ன? ஓலைச்சுவடிக்கும் முன்னே கல்வெட்டு எழுத்துகள் வந்துவிட்டதா?
பதில் – ஓலைச்சுவடிதான் முதலில் வந்தது. ஓலைச்சுவடியின்
ஆயுட்காலம் முந்நூறு ஆண்டுகள். அதன்பிறகு அதைப் படியெடுக்க வேண்டும். சில முக்கியமான
செய்தியை காலத்திற்கும் தேவையான செய்திகளை கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டன. கல்வெட்டு
பொது மக்களுக்கானது. செப்புப்பட்டயம் மன்னர்க்குரியது.
கேள்வி – ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்புப்பட்டயம் மூன்றும்
ஒரே எழுத்து வடிவம் கொண்டதா, மாறுபட்டதா?
பதில் – ஒரே வடிவம் கொண்டது. ஆனால் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும்
எழுத்து வடிவம் மாறக்கூடியது. ஆறாம் நூறாண்டு எழுத்து வடிவமும் எட்டாம் நூற்றாண்டு
எழுத்து வடிவமும் ஒன்றல்ல. எழுத்து வடிவங்களை வைத்து கல்வெட்டு வடிக்கப்பட்ட காலத்தைக்
கணித்துவிட முடியும்.
கேள்வி – ஏதேனும் அமைப்புகளில் சேர்ந்து பயணிக்கிறீர்களா?
பதில் - புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு தொல்லியல்
கழகம், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மூன்று அமைப்புகளில் சேர்ந்து பயணிக்கிறேன்.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ளேன். இந்த அமைப்பின் நிறுவனத்
செயலாளராக திரு. ஆ. மணிகண்டன் உள்ளார்.
கேள்வி – இந்தக் கல்வெட்டு கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களிடம்
எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறீர்கள்?
பதில் - முனைவர் சு. இராசகோபால் அவர்கள் பதிப்பாசிரியராகக்
கொண்டு ஆவணம் இதழ் வெளியிட்டு வருகிறார். இந்த இதழ் தஞ்சாவூர் தொல்லியல் கழகத்திலிருந்து
வெளிவருகிறது. இதன் தலைவர் திரு. செந்தீ நடராஜன். செயலர் பேரா. சு. இராசவேலு. நான்
செயற்குழு உறுப்பினராக உள்ளேன். அதன் மூலமாக அவ்வபோது கண்டுபிடிக்கும் கல்வெட்டுகளை
பிரசுரக்கிறோம்.
கேள்வி – ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பவர் யார்? அச்செய்தியை
எழுதுபவர் யார்?
பதில் – ஓலைச்சுவடிகளைப் பாதுக்காப்பவர்கள் திருமந்திர
ஓலை நாயகம் என்று அழைக்கப்படுகிறார்கள். அதைப் பாதுகாக்கும் இடத்திற்கு ஆவணக் களரி
என்று பெயர். ஓலைச்சுவடி வேலைகளை நிறைவேற்றுபவர் ஆணத்தி என அழைக்கப்படுகிறார். ஓலைச்சுவடி
படியெடுப்பதில் மூவேந்திர வேளாளர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.
கேள்வி – உங்கள் பணிக்கான அங்கீகாரம், கவனிப்பு எப்படியாக
உள்ளது?
பதில் – பெரிதும் கவனிக்கப்படுகிறது. பத்திரிகைத் துறை
கல்வெட்டு கண்டுபிடிப்புகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. இக்கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் தேடி வந்து பார்க்கிறார்கள்.
கேள்வி – உங்களது இந்தப் பணிக்காக பாராட்டுப் பெற்றிருக்கீர்களா?
பதில் – மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாண்டிய
நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது. அமைச்சர் தங்கம்
தென்னரசு இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாடு தொல்லியல் கழகம்
ஐம்பதாயிரம் உரூபாய் பொற்கிழியுடன் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது. இந்ததாண்டு
நடைபெறுகின்ற ஆறாவது புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் என்னை உட்பட ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனை வழங்கி கௌரவிக்கிறது.
வாழ்த்துகள் ஐயா. உங்கள் பணி மென்மேலும் சிறக்கவும்
இன்னும் பல புதிய கல்வெட்டுகள் கண்டுபிடித்து வெளியுலகத்திற்குக் கொண்டுவரவும் வாழ்த்துகிறேன்.
உங்கள் பணியை வணங்குகிறேன் ஐயா. நன்றி.


.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக