புதுக்கோட்டை எழுத்தாளர் - 225
கண்மணி ராஜாமுகமது, 09.05.1963, (பெற்றோர் - முகமது சுல்தான், பாத்துமுத்து), அம்மன் கோவில் வீதி, பொன்னமராவதியில் வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கம்பூர் கிராமம்.
திரைப்படத் துறையில் உதவி இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். 'மௌன ஊஞ்சல்' எனும் தொலைக்காட்சி தொடர் சன் டிவிக்காக இயக்கி உள்ளார். கவிஞர். சிறுகதையாளர். கன்னடம், மலையாளம் திரைப்படங்களில் கதை, வசனக்கர்த்தா. திரைப்பட பாடலாசிரியர். பொன்னமராவதியை மையமாகக் கொண்டு கண்மணி பதிப்பகம் நடத்துகிறார்.
கவிதையில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம் சிறுகதையாக படர்கிறது. ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.
காகிதத்தில் காதல் செய்து,
பால்யகால சொர்க்கவெளி,
மலர்க் கிரீடம்
கண்மணி ராஜாமுகமது கவிதைகள்
இவை நான்கும் கவிதைத் தொகுப்புகள்.
நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை
ஒரு சிறுகதைத் தொகுப்பு என ஐந்து நூல்கள். இலக்கியத்திற்காக திருப்பூர் இலக்கிய விருது, இலக்கியச் சுடர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை எனும் இத்தொகுப்பு பதினான்கு கதைகள் கொண்டது. விவசாயம், காதல், மதம், சமூக உறவு என்று வட்டார மொழியாடலில் கதைகள் பேசுகின்றன.
இத்தொகுப்பில் ' சாமியாடி பெரியப்பன்' என்றொரு சிறுகதை.
ஊர்ச்சாமி ஆடுகிறவராக இருக்கிறார் சாமியாடி பெரியப்பன். இவர் மூக்குறிஞ்சி என்கிறவனின் அப்பன். இவர் வயோதிகத்தால் படுக்கையில் விழுந்துவிடுகிறார். அவரைச் சுற்றி இக்கதை நகர்கிறது.
இவருக்கும் முன்பு ஊர்குலக் கோயிலில் பொட்டுக்காரக் கிழவன் அப்படினு ஒரு கிழவன். அவர் அம்மன் சாமி ஆடுகிறார். அவர் இறந்துவிட, அவர் மீது அணைந்து ஆடிய சாமி அடுத்து யார் மீது ஆடப்போகிறது என்று தேடுகிறார்கள். பல ஆண்டுகள் கடந்து மூக்குறிஞ்சி அப்பன் மீது ஆடுகிறது. அதன்பிறகு வருஷா வருஷம் விடாது திருவிழா நடக்கிறது.
யாருக்கு முடியவில்லையென்றாலும் அவரிடம் விபூதி கேட்டு வருகிறார்கள் " அரும்பு உதிராமக் காப்பாத்துறேண்டா மக்க" என்று விபூதி கொடுக்கிறார்.
அந்த மூக்குறிஞ்சி அப்பனின் உசிர் ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்துக்கொண்டிருக்கிறது. வாய் லேசாகத் திறந்திருக்க நீண்ட இடைவெளியில் மூச்சு வந்து போகிறது.
" எப்படித் திரிஞ்ச அப்பன்.இப்படி மொடங்கிக் கிடக்கே!" குடும்பம் அழுகிறது. மந்திரிச்ச கயிறு, விபூதியை அவர் மீது தடவிவிடுகிறார்கள்.
" போற உசிரு பொட்டுனு போகாம, பொழப்பைக் கெடுக்குதே" ஊரார்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஊர்க்காரர்கள் மூக்குறிஞ்சியை தனியே அழைத்துப்போய் சொல்கிறார்கள். " அதாம்ப்பா! எல்லாருமாச் சேந்து நல்லபடியா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். ஊரு அடங்கினப் பின்னாடி கமுக்கமா...அப்பனுக்கு ஒடம்பு பூராவும் நல்லா எண்ணெய்த் தேச்சு, பச்சைத் தண்ணியில தலை குளிப்பாட்டி போட்டுடு...காரியம் நல்லபடியா முடிஞ்சுடும் ".
மலங்க மலங்க முழிக்கிறான் மூக்குறிஞ்சி.
" நீ ஒண்ணும் கவலைப்படாதே... எல்லாத்தையும் ஊருப் பொதுச் செலவுல எழுதிருவோம்...அவருக்குச் செய்யாம ஆருக்கப்பா செய்யுறது..."
பெற்ற அப்பனைக் கொல்வதா, முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறான் மூக்குறிஞ்சி.
கதையாசிரியர் கண்மணி ராஜாமுகமது கதையை இவ்வாறு முடிக்கிறார். "எல்லாத்தையும் கவனமா பாத்துக்கிட்டிருந்த நெலாவுக்கு நெஞ்சு பொறுக்கலை. மனுஷப் பயலோட கிருத்துவத்தை நெனைச்சுப் பயந்து மேகத்தை இழுத்து ஒரேயடியாக போத்திக்கிச்சு "
கண்மணி பதிப்பகம்
6C, அம்மன் கோவில் வீதி
( புதிய பள்ளிவாசல் எதிரில் )
பொன்னமராவதி - 622407


கருத்துகள்
கருத்துரையிடுக