சிகரம்.சதீஷ்குமார். சிகரம் என்றொரு மாத இதழ் நடத்தியதால் பெயருக்கும் முன்பு சிகரம் சேர்ந்துகொண்டது. திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் கிராமத்தவர். செங்கமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், ஆகிய மங்கலம் ஊர்களால் சூழப்பட்டது இவரது கிராமம். ஆசிரியர்,கவிஞர், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர், கல்வி ஆலோசகர், கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர். இந்த வருடம் சிறந்த ஆசிரியருக்கான மாநில அரசு விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். இதுதவிர
மகாத்மா காந்தி விருது,சிகரம் தொட்ட ஆசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார். திருச்சி வானொலி, பண்பலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். குமுதம், சிநேகிதி,தினமணி, தி இந்து இதழ்களில் எழுதி வருகிறார். பைந்தமிழ் பாவலர் சி.துரைமாணிக்கம் அவர்களின் மாணவர் இவர்.
தமிழனென்ற கருவம் எனக்குண்டு, எனும் இந்நூல் கதை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. காமராசர், வைரமுத்து, குழந்தைகள், மகளிர் என பலரையும் பாடுகிறது. மக்களின் பொதுநலம் சார்ந்து நம்பிக்கை ஊட்டுகிறது.
இத்தொகுப்பில் ஒரு கவிதை . தலைப்பு - குழந்தைத் தொழிலாளியின் மரண வாக்குமூலம்
நான்
நடந்து வரும் பாதையிலும்
கடந்து வரும் காட்சியிலும் கண்ட நிரபராதியின் வாக்குமூலம்...
பாடசாலை செல்லும் வயதில் தொழிற்சாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும்
அப்பாவி பெற்றோர்களே !
நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள்...
என்ன! சொல்ல நான் யாரா ?
அப்பாவி பெற்றோர்களை
அப்பா என்றும் அம்மா என்றும் அழைக்கும் மகன்களில் ஒருவன்..
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் என்ன! வெடிமருந்து தொழிற்சாலைகளும் உணவகங்களும்
தானே!
நீங்கள் அடைத்துவிட்டீர்கள்
எங்களின் வாழ்வைத் தீப்பெட்டியின்
நான்கு சுவற்றுக்குள்...
நீங்கள் பற்றவைக்கும்
ஒவ்வொரு தீக்குச்சியில் தெரிகின்றதா? எங்களின் முகம்!
நீங்கள் வெடிக்கும்
ஒவ்வொரு பட்டாசுச் சத்தத்திலும் கேட்கின்றதா
எங்களின் அழுகுரல்
எங்கள் வயதுப் பிள்ளைகள் உணவகங்களில்
அழகாய் அமர்ந்து சாப்பிட்டுபோன பிறகு ஒவ்வொரு மேசையைத் துடைக்கும் பொழுதும்
எங்கள் இதயத்தின் இரத்தம்
கண்களின் கரையைக் கண்ணீராய் கடக்குமே
அது தெரியுமா? உங்களுக்கு
சீருடை அணிந்து பள்ளி செல்லும் குழந்தைகளைக் காணும் பொழுதெல்லாம்
கிழிந்து போன எங்களின் ஆடையை விட அதிகம்
கிழிந்துபோவது
எங்களின் மனதுதான்...
வற்றாத ஜீவநதியாய்
வசந்தங்கள் வழிந்தோட வேண்டிய வயதில்
வறண்ட பாலையாய் -தொலைத்துவிட்டீர்கள்
எங்கள் வாழ்வை
எம்மை பெற்றோருக்கும்
எம்மை ஆள்வோருக்கும்
சொல்ல விரும்புவது ஒன்றுதான்...
எங்களைத் தொலைத்துவிட்டு
நீங்கள்
யாருக்காக வாழப்போகிறீர்கள்
யாரை வைத்து ஆளப்போகிறீர்கள்..
உயிரோடு இருக்கும்பொழுதே _எங்கள் தலைகள்
நீங்கள் வைத்த கொள்ளி
இனிவரும் தலைமுறைக்காவது வெளிச்சத்தைக் கொடுக்கட்டும் ...
இப்படியாக முடிந்தது
குழந்தைத் தொழிலாளியின்
மரண வாக்குமூலம்...
அண்டனூர் சுரா

கருத்துகள்
கருத்துரையிடுக