புதுக்கோட்டை எழுத்தாளர் - 169
க.தங்கவேலு, குறிஞ்சித்தங்கம் என்று அறியப்படுகிறார். திருக்கோகர்ணம் அபிராமி நகரில் வசித்துவரும் இவரது பூர்வீகம் இலங்கை பதுளை - கொள்ளுமண்டி தோட்டம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் கொடுங்கொல் தாக்குதலின் போது புலம் பெயர்ந்து தலைமன்னார் வழியாக தனுஷ்கோடி வந்தடைந்து அங்கேயிருந்து ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தவர். இந்தப் பயணத்தில் இவருக்கொரு துர்சம்பவம் நடந்தேறியது. இந்திய குடிமகன் என்கிற சான்று, மலையகத் தமிழருக்கான வெளிறிய சிவப்பு வண்ண இந்திய கடவுச்சீட்டு, மறுவாழ்விற்கான ஏனைய ஆவணங்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் யாவும் சூட்கேஸூடன் ரயிலில் களவுபோகிறது. மறுவாழ்வு ஆவணமில்லாமல் எந்த அரசாங்க வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தனியார் துறையில் வாழ்நாளைக் கழித்து வருகிறார்.இவரது முதல் சிறுகதை உரம் பதுளை ஊவாக் கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் இலக்கிய வெளியீடு கலை விழா மலரில் வெளியானது. 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான சிறுகதைகளையும் புதுக்கோட்டைக்கு அவர் புலம் பெயர்ந்தன்பிறகு எழுதிய சிறுகதைகளையும் உள்ளடக்கி கறிவேப்பிலைகள் என்கிற தலைப்பில் முதல் நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
கறிவேப்பிலைகள் எனும் இச்சிறுகதைத் தொகுப்பு பதினொரு சிறுகதைகளைக் கொண்டது. இத்தொகுப்பின் என்னுரையில் மலையகத்தின் எழுச்சி நாயகர் இர.சிவலிங்கம், அரசியல் கலை இலக்கிய செயற்பாட்டாளர் எச்.எச்.விக்கிரமசிங்க இருவருக்கும் நன்றி பாராட்டுகிறார்.
1970 ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து தங்களின் கடும் உழைப்பால் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தங்களை வரித்துக்கொண்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் இவை.
இன்று நாம் பேசுகிற தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் இரண்டு பிரிவினர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு பிரிவினர் 1700-1800 ஆண்டுகளில் வெள்ளையர்களால் இலங்கையின் மலைக்காடுகளை வெட்டியழித்து தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரக்கன்றுகளையும் கோப்பிச் செடிகளையும் பயிர் செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். இரண்டாவது பிரிவினர் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள்.
இக்கதைகள் முதல் பிரிவினர்களின் வாழ்வைப் பேசுகிறது. ஆழமான மொழி, மலையகத் தமிழர்களுக்குரிய ஈரமான வாழ்வு, தனித்துவமான சொல்லாடல்களைக் கொண்டவை. படங்கை, மிலாறு, துவாலை, கலிசானை, சாரம், தேத்தண்ணீ, லேஞ்சு, குசினி,..போன்ற சொல்லாடல்கள் கதைகளைத் தனித்துவப்படுத்துகின்றன.
கறிவேப்பிலை என்கிற சிறுகதை தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு தூக்கியெறியப்படும் தொழிலாளர்களின் அந்திமக் காலத்தைப் பற்றியது. மகளின் திருமணத்திற்காக ஓடியோடி உழைக்கும் செல்லனின் அகாலக் காலம் கண்களைக் கசிய வைக்கிறது. அந்தத் தேயிலை பட்டறையில் முதலாளி வளர்ச்சிக்காக இயந்திரத்தனமாக உழைக்கும் அவர் ஒரு நாள் ஆலையின் பெல்ட்டில் அடிபட்டு இறந்துபோகிறார். குடும்பம் இழப்பீடு கேட்டு கைநீட்டி நிற்கிறது. " கவலையீனத்தால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு எங்களால் நஷ்ட ஈடு தரமுடியாது" என்று தேயிலை தோட்ட நிர்வாகம் கைவிரிக்கையில், வாசகனின் நெஞ்சு இதயத்தோடு பிசைகிறது.
மொழியால் கதையால் மலையகத் தமிழர்களின் வதையை, உழைப்பை, ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ள இத்தொகுப்பு சமீப வரவில் கனவரவு.
மணிவாசகர் பதிப்பகம் , சென்னை.


கருத்துகள்
கருத்துரையிடுக