புதுக்கோட்டை எழுத்தாளர் -177
பாலச்சந்தர், மச்சுவாடி, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் இரு மாவட்டச் செயலாளரில் ஒருவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை நகரக்குழு உறுப்பினர். நல்ல வாசிப்பாளர், நல்ல திறனாய்வாளர், களச் செயற்பாட்டாளர்.
கல்லூரி பருவத்தில் ஒட்டடை என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். ஆகவே அவரது முதல் படைப்பை ஒட்டடைக் கவிதைகள் என்கிற பெயரில் கொண்டு வந்திருக்கிறார்.
மிக விரைவில் வெளியீடு காணவிருக்கும் இந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை இது.
மானமும் அறிவும் கவிதைக்கு அழகு.
அறிவுத் தூரிகைக் கொண்டு மனதைச் சொறிகையிலும் மனத்தூரிகைக் கொண்டு அறிவைச் சொறிகையிலும் கவிதைகள் பிறக்கின்றன. இரண்டிலும் கவிதைகள் பிறந்தாலும் இரண்டுமே கவிதைகள் என்றாலும் முன்னது நூலாம்படை , பின்னது ஒட்டடை. புதுக்கோட்டையின் பெரும்வரவாய் வந்திருக்கும் கவிஞர் பாலச்சந்தர் நூலாம்படையைத் தன் தூரிகையால் விலக்கி ஒட்டடைகளைச் சேகரித்திருக்கிறார். நூலாம்படை ராஜ்ஜியத்தில் ஒட்டடைகள் ஏழை, எளியவர்கள் பாமரர்கள். இந்நூல் வறியவர்களைப் பாடும், அவர்களின் அன்றாடங்களைப் பாடும் பாமரக் கவிதைகள்.
எதுகையும் மோனையும் கவிதைக்கு அழகென இலக்கிய இலக்கணம் சொல்கிறது. இவரோ ஒரு கவிதையில் மானமும் அறிவும் கவிதைக்கு அழகு என்கிறார். சுரணை எனும் இக்கவிதையை வாசிக்கும் யாருக்கும் பட்டுக்கோட்டையார் நினைவுக்கு வருவார், ஆலங்குடி கவிஞர் சுந்தரபாரதி நினைவுக்கு வருவார். இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒரு சிறுகதையின் தலைப்பு. தலைப்பு வரி கவிதையென்று இதற்குப் புதுவடிவப் பெயர்சூட்டலாம்.
காதலைப் பாடித்தான் கவிஞன் பிறந்தான். பூமியில் நடந்தேறும் பல கோலங்களைப் பார்த்து முகம் சிவக்கும் அவன் காதலைக் காலமாகப் பாடத் தொடங்கினான். இங்குக் காலம் என்பது தடம், சுவடு, நிகழ்வு. சுண்டல் விற்பவனின் இலாவகம் இது. சுண்டலைக் குறைவாக வைத்துக் காகிதங்களை நிறைய மடிப்பதைப் போல இவர் காதலைக் குறைவாக வைத்துக் காலங்களைப் பெரிதாகச் சுற்றுகிறார்.
இவரது கவிதைகளில் முதுமை மீது மழை பொழிகிறது. இளமை குடை பிடிக்கிறது. மழைக்கு ஒதுங்கிய சொற்களைத் தூரிகைகளால் சேகரித்துக் கவிதை செய்திருக்கிறார்.
புதுக்கோட்டை கவிஞர்களின் கோட்டை. சமீப கணக்கெடுப்பின்படி நானூறுக்கும் குறையாமல் படைப்பாளர்களைக் கொண்டிருக்கிறது. கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அடையாளப்படுகிறார்கள். குறிப்பிட்ட சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளில் சாதித்திருக்கிறார்கள். திறனாய்வில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் படைப்பிலக்கியம் பக்கம் திரும்பி படைப்புப் பயிர் செய்கிறார்கள். அவர்களின் ஆய்வுநோக்கில் சமூகப் பிரதிபலிப்பு சேர்ந்துகொள்கையில் அவர்கள் வெளிக்கொணரும் முதல் படைப்பு முதிர்ந்த படைப்பாக அமைந்துவிடுகிறது. கவிஞர் பாலச்சந்தரை நான் அப்படியாகவே பார்க்கிறேன். நல்ல வாசிப்பாளர் இவர். திறனாய்வாளர், படைப்புலகைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர். ஒரு படைப்பிலக்கியவாதிக்கான அத்தனை இலக்கண அணிகலன்களைக் கற்று, பெற்று ஒட்டடை கவிதைகள் படைத்திருக்கிறார். கவிதைகளாலான பூமிக்கு முதல் மழை இவர். மழை அழகிற்கும் பெய்கிறது, தன் இருத்தலுக்கும் பெய்கிறது. மக்களுக்குப் பெய்யும் மழை சிறுமழையாயினும் அது நல்ல மழையே!
இவரது கவிதைகளில் அதிகம் கண்ணாடியைப் பார்க்க முடிகிறது. கண்ணாடியில் முகம் பார்க்கலாம், நிறம் பார்க்கலாம். இவரோ அந்தரங்க ரகசியத்தை வெளியே கசியவிடாத இரட்டைப் பிறவியாகப் பார்க்கிறார். இவரது ஒரு கவிதை இவ்வாறு பாடுகிறது.
"படுகுழியில்
மீந்துபோன மழைநீர்
கண்ணாடியாக
வானத்தை
ஒளிப்படம் எடுக்கிறது"
நல்ல காட்சிக்கவிதை இது. இயற்கையை அழகுபட படமெடுக்கும் இவர் அதே கண் வீழ்த்திக்கொண்டு சமூக அவலத்தையும் படமெடுக்கிறார். "சாதி எனும் சந்திப் பிழையின் சதியால் என் சந்ததி" என்கிறார் ஒரு கவிதையில். சாதி என்பது சந்திப்பிழை மட்டுமா? சந்ததிப்பிழையும் கூட.
சக படைப்பாளனாக இவர் குறித்து இந்தச் சமூகத்திற்குச் சொல்லவருவது ஒன்றுதான். நகரங்களைத் தூய்மை செய்கிறோம் என்கிற பெயரில் சேரிகளை அப்புறத்துவதைப்போல நூலாம்படைகளுக்கு வெள்ளையடிக்கிறோமென்று ஒட்டடைகளை அப்புறப்படுத்தும் இந்நிலத்தில் ஒட்டடைகளைச் சேகரித்து அதைக்கொண்டு நூல் படைத்திருக்கிறார். கவிஞர் பாலச்சந்தரின் சேவை மொழிப் பணியுடன் சமூகப் பணியும் சேர்ந்தது. கவிதை காலத்தோடு சேர்ந்து இவரைத் தன் வரவில் வைக்கட்டும்,,,
அன்புடன்
அண்டனூர் சுரா.


கருத்துகள்
கருத்துரையிடுக